'WE SHALL OVERCOME' - Martin Luther King Jnr.

JOIN IN THE EFFORT FOR CHANGE!
What are you doing about the ethnic conflict in Sri Lanka? What do you believe in? Are you pro-war or anti-war? How would you describe your political conscience? Come lets have a SahaSamvada. Lets talk about what we believe in and debate the rights and wrongs of our beliefs. Lets make some changes in our attitudes. Lets 'talk' to our thoughts and explore the possibility of a social movement for peace. Its time for old ideas to die. We have had enough of violence and intimidation. It's time for change...

Saturday, 28 November 2009

ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? எங்கிருந்து தொடங்க வேண்டும்?

- நிலாந்தன்

ஈழத்தமிழர்கள் இப்பொழுதும் ஒரு தெளிவற்ற காலசந்தியில் தான் நிற்கிறார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் வீழ்ச்சி அடைந்து ஏறக்குறைய ஏழு மாதங்கள் ஆன பின்பும் ஈழத்தமிழர்கள் இப்பொழுதும் எதிர்காலத்தைக் குறித்த தெளிவற்ற சித்திரங்களுடன் தடுமாறும் ஒரு ஜனக்கூட்டமாகவே காணப்படுகிறார்கள்.

முப்பத்து எட்டு ஆண்டுகால ஆயுதப்போராட்டம் தமிழர்களை அவர்களுடைய "எதிரிகளிடம்" கையளிப்பதில்தான் முடிந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு ஊடக நண்பர் சொன்னார் "போராட்டம் தொடங்கியபோது கோட்டையிலும்,பலாலியிலும், ஆனையிறவிலும் நின்ற ராணுவத்தை இப்பொழுது எங்கள் வீட்டு முற்றத்திலும் கோடியிலும் கொண்டு வந்து நிறுத்திவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்" என்று. இனி ஒரு ஆயுதப் போராட்டத்தைப் பற்றி கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு நொந்து நூலாகிப் போய் விட்டார்கள் வன்னி மக்கள்.

ஒரு புறம் களத்தில் அதாவது வடக்கு கிழக்கில் தமது அரசியல் எதிர்காலம் எது என்பதைப் பற்றி சிந்திக்கும் சக்தியற்று காணப்படும் ஜனங்கள். இன்னொரு புறம் புலம் பெயர்ந்த நாடுகளில் நாடுகடந்த அரசைக் குறித்த வாதப்பிரதிவாதங்களும் வாக்கெடுப்புகளும் தீவிரமாக இடம் பெற்று வருகின்றன. தமது அரசியல் எதிர்காலம் எது என்பதைத் தீர்மானிப்பதில் களத்திற்கும் புலத்திற்கும் இடையில் பொதுவான நிகழ்ச்சி நிரல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. விடுதலைப்புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் இருந்தவரைக்கும் சரிக்கும் பிழைக்கும் அப்பால் அவர் ஓரளவுக்காயினும் களத்துக்கும் புலத்துக்குமான ஜனவசியம் மிக்க ஒரு மையமாகத் திகழ்ந்தார். இப்பொழுது அவர் இல்லாத வெற்றிடத்தில் அவருக்குப் பின்னரான அடுத்த கட்ட அரசியலை முன்னெடுத்துச் செல்ல வல்ல ஜனவசியம் மிக்க, தீர்க்கதரிசனமுள்ள, ரத்தக்கறைபடாத, தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்ற ஒரு பேராளுமை இனிமேல்தான் எழுச்சிபெற வேண்டியிருக்கிறது.

வரப்போவது யாராயிருப்பினும் அவர் திரு.பிரபாகரன் ஏற்படுத்திய விளைவுகளைக் கடந்தே போக வேண்டியிருக்கும். அதாவது பிரபாகரனின் உடலைக் காவிக்கொண்டு வரவும் முடியாது. அதே சமயம் பிரபாகரனை அவரது தோல்விகளோடு சேர்த்து ஒரேயடியாக வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசி எறிந்துவிடவும் முடியாது. தற்பொழுது விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான தமிழ் அரசியல் வெளியில் மூன்று பிரதானமான போக்குகள் காணப்படுகின்றன. முதலாவது திரு.பிரபாகரனை கடவுளாக்கி வழிபடும் ஒரு போக்கு. ஏற்கனவே இருந்து வந்த இந்தப் போக்கு மே 17- ற்குப் பின் உண்டாகிய கழிவிரக்கம் காரணமாக இன்னும் பலமடைந்து வருகிறது. இரண்டாவது திரு.பிரபாகரனைப் பிசாசு என்று தூற்றும் ஒரு போக்கு. இதுவும் ஏற்கனவே இருந்து வந்த ஒரு போக்கு. இது மே 17-ற்குப் பின்பு எல்லாத் தீமைகளிற்கும், எல்லா தோல்விகளிற்கும் பிரபாகரனின் மீது பழியைப் போடும் ஒன்றாக வளர்ச்சி பெற்று வருகிறது. மூன்றாவது இந்த இரண்டு துருவ நிலைகளுக்கு நடுவே வரும் ஒரு மிதப்போக்கு. பிரபாகரனுக்கு முன்பு இது சிறு போக்குத்தான்… பிரபாகரனுக்குப் பின்பும் இன்று வரையிலும் இது சிறு போக்குதான். இந்த மூன்று போக்குகளையும் விரிவாகப் பார்ப்பதன் மூலம் தான் ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கான அடிப்படைகளை கண்டு பிடிக்கலாம். எனவே இம் மூன்று போக்குகளையும் ஆழமாகப் பார்ப்போம்.

முதலாவது பிரபாகர வழிபாடு. இது அவரை ஒரு அவதாரப் புருசராகவோ அல்லது அமானுஸ்ய சக்திகள் மிக்க ஒரு யுகபுருசனாகவோ பார்க்கிறது. அவரைக் கேள்விக்கிடமற்ற விமர்சனங்களிற்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக நிலைக்கு உயர்த்தி வைத்திருக்கும் இப்போக்குக்குரியவர்களில் ஒரு பிரிவினர், அவர் இன்னமும் உயிருடன் இருப்பதாக நம்புகிறார்கள். மற்றொரு பிரிவினர் அவர் இல்லாவிட்டாலும் அவருடைய பாணியிலான ஒரு அரசியலைத் தொடர யாராவது ஒரு தப்பிப் பிழைத்த விசுவாசி எங்காவது ஒரு மறைவிடத்திலிருந்து என்றாவது ஒரு நாள் வருவார் என்று காத்திருக்கிறார்கள்.

முதலில் திரு. பிரபாகரன் இறக்கவில்லை என்று நம்புவோர்க்கான பதிலை பார்க்கலாம். அவர் இறக்கவில்லை அல்லது அவரைக் கொல்ல இந்த பூமியிலே எந்த மானுடனாலும் முடியாது என்று நம்பும் எவரும் பிரபாகரனை அவமதிக்கிறார்கள் என்றே பொருள் படும். ஏனெனில் பிரபாகரன் ஒரு செயல் வீரன். எதையாவது செய்யாது விட்டால் நாடு தன்னை மறந்துவிடும் என்று நம்பிய நெப்போலியனைப் போன்ற இயல்புடைய ஒருவர். அவருடைய எழுச்சியின் தொடக்கத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் வீழ்ச்சி வரைக்கும் அவர் அப்படித்தான் வாழ்ந்தார். அவருக்கு உறங்குகாலம் என்பதெல்லாம் கிடையாது. தலை மறைவாக இருந்தாலும் அவர் சும்மாயிருக்க மாட்டார். அவருடைய இந்த சதா செயற்படும் பண்புதான் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏனைய விடுதலை இயக்கங்களை விடவும் இராணுவ ரீதியாக பலமுடையதாக மாற்றியது. எனவே பிரபாகரன் இயல்பில் ஒரு செயல் வீரன். உறங்கு நிலையற்ற ஒரு செயல் வீரன். அப்படிப்பட்ட ஒருவர் மே 17-ற்குப் பின்னர் இத்தனை மாதங்களாக செயற்படாமல் இருக்கிறார் என்றால் அது அவருடைய இயல்பிற்கு மாறானது.

தவிர பிரபாகரன் தப்பிச் சென்றிருக்கலாம் என்பதை ஒரு கதைக்காக எடுத்துக்கொண்டாலும் கூட, அவர் அப்படி தப்பிச் செல்லமுன்பு வயதான தனது பெற்றோரையும் தப்ப வைத்திருப்பார். அவர்களை எங்காவது ஒரு பாதுகாப்பான இடத்திற்கு முன்கூட்டியே அனுப்பி வைத்திருப்பார். அல்லது தன்னுடன் அழைத்துச் சென்றிருப்பார். ஆனால் முடிவில் என்ன நடந்தது? அவருடைய முதிய பெற்றோர் அவருடைய "எதிரிகளிடம்" கையளிக்கப்படும் ஒரு பரிதாபகரமான நிலையே வந்தது. இது அவருடைய இறுதிக்கட்டம் எந்தளவுக்கு நெருக்கடியானதாக இருந்தது என்பதையே காட்டுகிறது.

இவை தவிர மேலும் ஒரு விளக்கமும் உண்டு. அவருடைய முன்னாள் சகாவும் பின்னாளில் அவரிடமிருந்து பிரிந்து சென்று தற்பொழுது அவரை விமர்சிப்பவருமாகிய திரு.ராகவன் கூறியது அதாவது ஒரு மரபு ரீதியிலான அரசாங்கம் இவ்வளவு பெரிய பொய்யை தொடர்ச்சியாகக் கூற முடியாது என்பது. அதுவும் இந்தத் தகவல் யுகத்தில் சொன்ன பொய்யை தொடர்ந்தும் அழுத்திச் சொல்வது என்பது கடினம். எனவே திரு.பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதே மெய்யானது. அதை ஒப்புக்கொள்ள மறுக்கும் எல்லா விசுவாசிகளும் முதலாவதாக அவருடைய இயல்பை அறியாது அவரை அவமதிக்கிறார்கள். இரண்டாவதாக ஈழத்தமிழ் அரசியல் அவரோடு தேங்கி நின்று விடவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அடுத்ததாக அவருடைய பாணியிலான போராட்ட வடிவத்தை தொடர விரும்புவோர் பற்றி பார்க்கலாம். இவர்களும் ஏறக்குறைய பிரபாகரனின் உடலையும் அவரது கோட்பாடுகளையும் மம்மியாக்கம் செய்து பேண முற்படுகிறார்கள் எனலாம். ஏனெனில் நிலவும் ஒரு துருவ உலக ஒழுங்கின்படி பிரபாகரனின் பாணி எனப்படுவது காலங்கடந்ததாகி விட்டது. இந்நிலையில் பிரபாகரனிசத்தை மம்மியாக்கம் செய்து பேணமுற்படும் எல்லாரும் இறந்தகாலத்திலேயே சீவித்திருக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு கள யதார்த்தம் தெரியவில்லை. இனியுமொரு ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க முடியாத அளவிற்கு ஈழத்தமிழர்கள் குறிப்பாக வன்னி மக்கள் களைத்தும், சலித்தும், வெறுத்தும், இடிந்தும் போய்விட்டார்கள்.

மிகச் சிறிய இனமாகிய ஈழத்தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தின் சாணக்கியமற்ற மற்றும் தீர்க்க தரிசனமற்ற போக்குகளால் தமது வல்லமைக்கு மீறி அசாதாரணமான அசாத்தியமான தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். ஒரு சிறிய இனத்திற்கு இருக்கக்கூடிய புறவயமான பௌதீக வரையறைகளை மீறிச்சாதிக்கப்பட்ட அனைத்து பெருஞ் செயல்களுக்கும் அதிகமதிகம் அகவயப்பட்ட விளக்கங்களையே கொடுக்க முடியும். அதிலும் குறிப்பாக வன்னியில் வாழ்ந்த ஒரு சிறிய சனத்தொகையே (இது கனடாவில் புலம்பெயர்நது வாழும் சனத்தொகைக்கு ஏறக்குறைய சமம்) முழு ஈழத்தமிழினத்துக்குமான போரை எதிர் கொண்டது. தியாகம் செய்ததும், காயப்பட்டதும், அவமானப்பட்டதும், பசிகிடந்ததும், பதுங்குகுழிக்கும் தறப்பாள் கூடாரத்துக்கும் இடையே ஈரூடகமாக கிழிபட்டதும், இறுதிக்கட்டதில் போராளிகளுக்கும் அரச படைகளிற்கும் இடையே நார்நாராய் கிழிபட்டதும் அவர்கள்தான்.

ஏறக்குறைய முழு உலகத்தாலும் கைவிடப்பட்ட ஒரு நிலையில் கூட்டுத் தண்டனையை அனுபவித்ததும், அனுபவிப்பதும் அவர்கள்தான். யார் யாருடையதோ தீர்கதரிசனமற்ற முடிவுகளால் தலைச்சான் பிள்ளைகளை பலியாடுகளாய் கொடுத்ததும் தலைமுறை தலைமுறையாக சேகரித்த சொத்துக்களையெல்லாம் தெருக்களில் வீசி எறிந்து விட்டு வெறுங்கையுடன் சரணடைந்ததும், தண்டனைக் கைதிகளாய் பிடிக்கப்பட்டதும் அவர்கள் தான். எனவே போரைத் தொடர வேண்டும் என்று ஆசைப்படுவோர் முதலில் வன்னி மக்களிடம் சென்று வாக்கெடுப்பு நடத்தட்டும்.

முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட வன்னிச் சனங்களை ஏனைய அப்பாவித் தமிழர்கள் அன்போடும் ஆதரவோடும் அணைக்கிறார்கள். ஆனால் ஓரளவுக்கு அரசியல் தெரிந்த அல்லது படித்த தமிழர்களில் பெரும் பகுதியினர் இந்த வன்னி அகதிகளுடன் தொலைபேசியில் கதைப்பதற்கே பயந்து நெளிகிறார்கள். வன்னியில் இருந்து வந்தாலே அது புலிகள் தான் என்று அரசாங்கம் மட்டும் நம்பவில்லை. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஏற்கனவே வசித்து வரும் தமிழர்களில் கணிசமான தொகையினரும் அப்படித்தான் நம்புகிறார்கள். வன்னி அகதிகளுடன் கதைக்க அவர்களுடன் நெருங்கி உறவாட அஞ்சுகிறார்கள். ஒரு வன்னி அகதியை சந்தித்து விட்டு வீடு திரும்பும் போது யாரோ என்னை உற்றுப் பார்ப்பது போலவும் என் பின்னால் தொடர்ந்து வருவது போலவும் உயிர் முழுவதும் கூசுகிறது என்று ஒரு படித்த யாழ்ப்பாணத்து நண்பர் என்னிடம் சொன்னார்.

உண்மைதான். அரசகட்டுப்பாட்டுப் பகுதிகளில் அநேகமானவை இப்பொழுதும் பெருமளவுக்கு அச்சத்தில் உறைந்து போய் உள்ளன. ஒரு தற்காப்பிற்காக அங்குள்ளவர்கள் வன்னி அகதிகளுடன் நெருங்கிப் பழக அஞ்சுவதை புரிந்து கொள்ள முடியும்தான். ஆனால் தனிப்பட்ட உரையாடல்களின்போது பிரபாகரன் சாகவில்லை என்றும், புலிகள் மறுபடியும் வருவார்கள் என்றும் வீராவேசமாக கதைக்கும் பலரும் (சில அரிதான புறநடைகள் தவிர) வன்னி அகதியோடு நெருங்கிப் பழகத் தயங்குவதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அவர்களுக்கு திரு.பிரபாகரன் வேண்டும், வீரம் வேண்டும், தியாகம் வேண்டும், சண்டையும் நடக்கவேண்டும்… ஆனால் அவர்கள் எல்லோருக்குமாக யுத்தம் புரிந்த வன்னி அகதியுடன் நெருங்கிப் பழக மட்டும் அச்சம்.

எந்த ஒரு ஜனக்கூட்டம் முழுத் தமிழனத்துக்குமாக தியாகம் செய்து பெரும்செயல்களைச் செய்து முடிவில் சாவினால் சப்பித் துப்பப்பட்டு தப்பி வந்ததோ அந்தச் சனங்களுடன் நெருங்கி உறவாட துணிச்சலற்ற பலரும் புலிகளின் வீரத்தைப்பற்றி போற்றும் ஒரு முரணைக் காண முடிகிறது. இது எதைக் காட்டுகிறது? இவர்களுக்கு சண்டை வேண்டும். தமிழ் வீரம் என்று சொல்லி கைதட்டவும் விசிலடிக்கவும் வெடி கொழுத்தி மகிழவும் யுத்தகள வெற்றிகள் வேண்டும். ஆனால் இவை எல்லாவற்றிற்குமாக தப்பிச் செல்ல வழியற்றிருந்த ஒரு சிறிய ஜனக்கூட்டமே பீரங்கித் தீனியாக வேண்டும். அவர்களுடைய தலைச்சான் பிள்ளைகளே பலியாடாக வேண்டும். இவர்கள் யாரும் யுத்தத்திற்கு போகமாட்டார்கள். தங்களுடைய பிள்ளைகளையும் அனுப்ப மாட்டார்கள். இது முழுக்க முழுக்க தமிழ்ச்சினிமா ஸ்தாபித்து விட்டிருக்கும் ஒரு பார்வையாளர் பண்பாடுதான். யாரோ தியாகம் செய்ய, யாரோ வதைபட இவர்கள் வெடிகொழுத்தி கொண்டாடுவார்களாம்.

எனவே பிரபாகரனிசத்தை மம்மியாக்கம் செய்து காவும் எல்லோரையும் நோக்கி இக்கட்டுரை ஒரு கேள்வியை முன்வைக்கிறது. நீங்கள் யுத்தம் தொடரவேண்டும் என்று விரும்பினால் அதில் முன்னணிப் படையாகப் போகத்தயாரா? பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு குறிப்பாக ஒப்பீட்டளவில் ஜனநாயகமான சூழல்களில் வசித்துக்கொண்டு முழுக்க முழுக்க ராணுவமயப்பட்ட மூடப்பட்ட ஒரு நிலத்தில் வாழும் ஜனங்களின் மீது போரையும் போர்ப்பிரகடனங்களையும் ஏவி விட முயலும் எல்லாருமே அதில் முதல் வீரராகப் போகத் தயாராக இருக்கவேண்டும். இல்லையென்றால் அந்த ஜனங்கள் தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிடவேண்டும்.

யுத்த இயந்திரத்திற்கு காசை அள்ளி இறைத்த ஒரே காரணத்திற்காக யாருடையதோ தியாகத்தில் குளிர் காய்ந்து விட முடியாது. எனவே திரு.பிரபாகரனை மம்மியாக்கம் செய்து வைத்திருக்கும் எவரும் ஈழத்தமிழ் அரசியலை அதன் அடுத்த கட்டத்திற்கு போகவிடாது தடுப்பதோடு, வன்னியில் இருந்து சாவினால் உமிந்து விடப்பட்ட ஜனங்களை மேலும் ஆபத்துக்குள்ளாக்குகிறார்கள். இவர்கள் பாதுகாப்பான ஜனநாயகமான ஒரு சூழலில் இருந்து கொண்டு எதையும் கதைக்கலாம். ஆனால் ஜனநாயமற்ற ஒரு சூழலில் வசிக்கும் மக்கள் குறிப்பாக தலைக்குப்பதில் தலை சீவப்படும் ஒரு அரசியல் சூழலில் சிலமாதங்களிற்கு முன்புவரை வசித்து வந்த மக்கள் இவர்களுடைய பிரகடனங்களால் மேலும் வதைபட நேரிடலாம். விடுதலைப்புலிகளின் தலைவர் திரு.பிரபாகரனை கடவுளாக வழிபடும் ஜனநாயக உரிமையை கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அந்த வழிபாடானது தோற்கடிக்கப்பட்ட ஒரு ஜனக்கூட்டத்தை தொடர்ந்தும் இறந்த காலத்திலேயே உறைந்து கிடக்குமாறு கோருவதை இக்கட்டுரை விமர்சிக்கிறது.

இனி இரண்டாவது போக்கை பார்க்கலாம். இது திரு.பிரபாகரனைப் பிசாசு அல்லது பாசிஸ்ட் அல்லது போர்க்குற்றவாளி என்று கூறுவோர் அணி. அவரைப் பாட்டுடைத் தலைவனாக ஏற்றுக்கொள்ள மறுத்து அவரை ஒரு பாசிஸ்ட் என்று கூறும் ஜனநாயக உரிமையை இக்கட்டுரை மதிக்கிறது, ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அதற்காக எல்லாத் தீமைகளிற்கும் அவரே பொறுப்பு என்றும் அதனால் இலங்கை அரசாங்கம் செய்வதெல்லாம் சரி என்றும் கூறுவதை இக்கட்டுரை விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறது.

முதலில் ஒரு அடிப்படை உண்மையை தெளிவாகப் பார்க்கவேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு காரணம் அல்ல; அது ஒரு விளைவு மட்டுமே. தீர்க்கப்படாத இன முரண்பாட்டின் விளைவே விடுதலைப்புலிகளும் ஏனைய தமிழ் இயக்கங்களும். விடுதலை இயக்கங்களுடன் கூடப் பிறந்த ஜனநாயக மறுப்பின் விளைவே, விடுதலைப்புலிகளுக்கு எதிரான இயக்கங்களை உயிர் பிழைத்திருப்பதற்கான தங்குநிலை அரசியலை நோக்கித் தள்ளியது. அதாவது விளைவின் விளைவுகள் அவை. எனவே விளைவின் வீழ்ச்சியை வைத்துக் கொண்டு காரணமும் இல்லாமல் போய்விட்டது என்று சொல்லிவிட முடியாது. அரசாங்கத்தின் வெற்றியை பெருந்திரளான தமிழ்மக்கள் தங்களுடைய வெற்றியாகக் கருதவில்லை என்பதால்தான், விடுதலைப்புலிகளை கடுமையாக விமர்ச்சிப்பவர்கள் கூட அவர்களிடம் இப்பொழுது கழிவிரக்கம் காட்டுகிறார்கள். விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சிக்கும் ஒரு புலம் பெயர்ந்த தமிழர் சொன்னார் "கடிநாய் என்றாலும் அது ஒரு காவல் நாய்" என்று.

இதுதான் இலங்கைத் தீவின் இன யதார்த்தம். இலங்கை அரசாங்கம் யுத்தத்தில் பெற்ற வெற்றிகளை ஒட்டுமொத்த இறுதிகட்ட அரசியல் வெற்றியாக மாற்ற தயாரற்ற ஒரு போக்கே யுத்தம் முடிந்து ஏழுமாதங்கள் ஆன பின்னரும் இப்பொழுதும் காணப்படுகிறது. அவ்விதம் ராணுவ வெற்றிகளை அரசியல் வெற்றிகளாக மாற்றத் தேவையான தீர்க்க தரிசனமும் திடசங்கற்பமும் ஜனநாயக அடித்தளமும் கொழும்பில் இருப்பதாகத் தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப்புலிகளும் இதே தவறைத்தான் செய்தார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இந்நிலையில் யுத்தத்தின் வெற்றி காரணமாக சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் ஒரு புதிய இன எழுச்சி அலை உருவாகியுள்ளது. அதை மீறிச் செல்லும் தைரியம் இலங்கைத் தீவில் எந்த ஒரு பெருங்கட்சிக்கும் இருப்பதாகத் தெரியவில்லை என்பதால்த்தான் ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியானது ஒரு முன்னாள் ராணுவ தளபதியைப் பற்றி சிந்திக்கவேண்டியிருக்கிறது.

இத்தகைய ஒரு பகைப்புலத்தில் இனப்பிரச்சினைக்கு உரிய கௌரவமான ஒரு தீர்வு முன்வைக்கப்படாத ஒரு வெற்றிடத்தில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் திரு.பிரபாகரனும் விடுதலைப்புலிகள் இயக்கமும் தான் காரணம் என்று கூறுவது அதாவது அடிப்படைக்காரணம் அப்படியே தொடர்ந்தும் இருக்கும் ஒரு பின்னணியில், விளைவையே காரணமாக மாறாட்டம் செய்வது என்பது பிரச்சினையின் அடியாழ வேர்களை கண்டுபிடிக்கத் தடையாகிவிடும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் எனப்படுவது முழுக்க முழுக்க திரு பிரபாகரன் என்ற ஒரு தனிப்பெரும் ஆளுமையின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு அமைப்புத்தான். அதற்குள் காணப்பட்ட ஏனைய பெரிய ஆளுமைகள் எதுவும் தலைமையை பலப்படுத்திய உப ஆளுமைகளே தவிர திரு.பிரபாகரனுக்கு நிகரானவை அல்ல. அதாவது விடுதலைப்புலிகள் என்றாலே அது பிரபாகரன் தான். பிரபாகரன் என்றாலே அது விடுதலைப்புலிகள் தான். இனிமேல் அவர் இல்லாத வெற்றிடத்தில் யார் வந்தாலும் இயல்பில் அது முன்னைய விடுதலைப்புலிகள் இயக்கமாய் இருக்க முடியாது. எனவே விடுதலைப் புலிகளை விமர்சிப்பது என்பது அதன் பிரயோக நிலையில் பிரபாகரனின் தனி ஆளுமையை விமர்சிப்பது தான். மேலும் விடுதலைப்புலிகளின் அதிகார கட்டமைப்பைப் பொறுத்தவரை அதன் உச்சியில் காணப்பட்ட திரு.பிரபாகரனே எல்லா இறுதி முடிவுகளையும் எடுத்தார். எனவே விடுதலைப்புலிகளை விமர்சிப்பது என்பது அவரை விமர்சிப்பதுதான். ஆனால் அதற்காக அவரை விமர்சிப்பது என்பது அவருக்கேயான தனி விசேசமான வரலாற்றுப் பின்னணியில் இருந்தும், சமூக உளவியற் பின்னணியில் இருந்தும் அவரைப் பிரித்தெடுத்து பார்ப்பதாகப் பொருள் படாது. பிரபாகரன் ஒரு தனிமனிதர் அல்ல. அவர் வெற்றிடத்தில் இருந்து வரவுமில்லை. அவர் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் கூட்டு உளவியலின் ஒரு வகை மாதிரி. அவருக்கேயான ஒரு வரலாற்று காலகட்டத்தின் தவிர்க்கப்படமுடியாத ஒரு விளைவு.

அவரை எதிரியாகப் பார்க்கும் ஈழத்தமிழர்களில் அநேகர் அவரை தமக்குப் புறத்தியான ஒரு ஆளுமையாகவே பார்க்கிறார்கள். ஆனால் பிரபாகரத்தனம் எனப்படுவது அநேகமாக எல்லா ஈழத்தமிழர்களிற்குள்ளும் ஏதோ ஒரு விகிதமளவிற்கு இருக்கிறது என்பதே உண்மை. இனமானம் இனப்பெருமை பேசும் எல்லாத் தமிழ் போர் வீரனும் அவருடைய சாயலை உடையவன் தான். சரணடையாமை, எதிரியை மன்னியாமை என்றுவரும் எல்லா இடங்களிலும் அவர் உண்டு. கொலனித்துவ கால பிரிட்டிஷ் உயர் அதிகாரிகளால் பெரிதும் பாராட்டப்பட்ட தமிழ்ச் சிப்பாய்களிடம் காணப்பட்ட விசுவாசம், உத்தரவை சிரமேற்கொண்டு நிறைவேற்றும் கீழ்ப்படிவு போன்ற தமிழ்ச் சிப்பாய்த்தனம் அல்லது தமிழ் இராணுவத்தனம் எனப்படுவது பிரபாகரனை எதிர்ப்பேதுமின்றி ஏற்றுக்கொண்டு விட்டது.

மேலும் குடும்பத்திற்குள் மற்றவர்களின் அபிப்பிராயங்களைப் பொருட்படுத்தாத குடும்பத் தலைவனையும், பிள்ளைகளை தண்டனைகள் மூலம் வளர்த்தெடுக்கலாம் என்று நம்பும் பெற்றோரையும், பாடசாலைகளில் பிரம்புடன் நிற்கும் ஆசிரியரையும், ஆசிரியரை நிற்கவைத்து கதைக்கும் அதிபரையும், அதிபரை நாட்டாண்மை செய்யும் உயர்அதிகாரியையும், ஆஸ்பத்திரிகளில் எஜமானர்களைப் போல வரும் மருத்துவரையும், அவர் இல்லாத போது ராஜாங்கம் செய்யும் தாதியையும், தாதி இல்லாத இடத்தில் அட்டகாசம் செய்யும் சிற்றூழியரையும் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளும் அல்லது மௌனமாக சகித்துக்கொள்ளும் ஒரு சமூகம், அரசியலில் திரு.பிரபாகரன் கொண்டு வந்த ஒற்றைப்பரிமாண அணுகு முறையையும் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டுவிட்டது.

இக்கருத்தை மேலும் பலப்படுத்த விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக நம்பப்படும் ராஜினி திரணகம தன்னுடைய நண்பரான ஒரு மருத்துவ நிபுணரிடம் கேட்ட கேள்வியை இங்கு எடுத்துக்காட்டலாம். "இந்தப்பிள்ளைகள் இவ்வளவு வன்முறையை எங்கிருந்து பெற்றார்கள். எங்களுடைய வீடுகள், பாடசாலைகள், ஆலயங்கள், சனசமூக நிலையங்கள், ஒன்றுகூடும் இடங்கள் போன்றவற்றில் இருந்து தானே" என்று. இதுதான் உண்மை. தமிழ் வீரத்தின் மறுபக்கமாயிருந்த மன்னிப்பிற்கு இடமின்மையும், ஜனநாயக மறுப்பும் வெற்றிடத்தில் இருந்து வரவில்லை. அது ஈழத்தமிழ் சமூகத்தின் கூட்டு உளவியலில் இருந்து அதாவது யுத்தத்தின் வெற்றிக்காக எதையும் தியாகம் செய்யலாம். அல்லது விளைவுகளே வழிவகைகளை நியாயப்படுத்தி விடும் என்ற ஒரு கூட்டு மனோநிலையில் இருந்து வந்தவைதான்.

எனவே திரு.பிரபாகனை விமர்சிப்பது என்பது ஒவ்வொரு ஈழத்தமிழனும் அதோடு அவரை ஆதரிக்கும் ஒவ்வொரு இந்தியத் தமிழனும் தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்து கொள்வதுதான். அவரை அவருக்கேயான தனி விசேசமான வரலாற்றுப் பின்னணியில் இருந்தும் சமூக உளவியற் பின்னணியில் இருந்தும் பிடுங்கியெடுத்து விமர்சிப்பது என்பது அவரை மட்டுமல்ல முழு ஈழத்தமிழ்ச் சமூகத்தின் கூட்டு உளவியலையும் அதோடு முக்கியமாக இலங்கைத் தீவின் இன யதார்த்தத்தையும் புரிந்து கொள்ளத் தடையாகிவிடும். பிரபாகரனை வழிபடுவது என்பது எப்படி ஈழத்தமிழ் அரசியலை அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தடையாயிருக்கிறதோ, அது போலவே அவருடைய பாத்திரத்தை அதற்கேயான சமூக மற்றும் வரலாற்றுப் பின்னணிகளில் இருந்து பிரித்தெடுத்து விமர்சிப்பது என்பதும் ஈழத்தமிழ் அரசியலை அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தடைதான்.

இனி மூன்றாவது போக்கைப் பார்க்கலாம். இது மேற்சொன்ன ஒன்றுக்கொன்று நேர் எதிரான துருவ நிலைப்பாடுகளுக்கு நடுவே வருகிறது. இதில் வழிபாட்டிற்கும் இடமில்லை, வசை பாடுவதற்கும் இடமில்லை. பதிலாக நிதானமான தீர்கதரிசனத்துடன் கூடிய அறிவுப்பூர்வமான ஒர் அணுகுமுறையே இது. முன்சொன்ன துருவ நிலைப்பாடுகள் இரண்டும் தமிழர்களை இறந்த காலத்திலேயே தேங்கி நின்றுவிடச் செய்பவை. அதாவது திரு.பிரபாகரன் என்ற மையத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் இறந்த காலத்துடனேயே நின்று விடுவது. ஆனால் இந்த மூன்றாவது போக்கெனப் படுவது தமிழ் அரசியலைத் திரு.பிரபாகரன் என்ற மையத்தை கடந்து கொண்டுவரவேண்டும் என்று கோருவதாய் இருக்கிறது. அதாவது நிகழ்காலத்திற்கும் வருங்காலத்துக்கும் ஆனது. பிரபாகரன் ஒரு கட்டம். அதில் அவருக்கென்றொரு முற்போக்கான பாத்திரமும் இருந்தது. பிற்போக்கான பாத்திரமும் இருந்தது. இப்பொழுது அது கடந்து செல்லப்படவேண்டிய காலாவதியாகிவிட்ட ஒரு கட்டம். இனி அடுத்த கட்டம், அது அவர் விட்ட இடத்தில் இருந்து தொடங்குவது அல்ல. மாறாக அவர் தொடாத இடங்களில் இருந்து தொடங்குவது. அவர் ஏன் தோற்கடிக்கப்பட்டார் என்ற கேள்விகளில் இருந்து தொடங்குவது.

இலங்கைத் தீவிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் பெரும் போக்குகளாக காணப்படும் முன் சொன்ன துருவ நிலைப்பட்ட போக்குகள் தற்பொழுது களத்தில் அதாவது இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் பேரம் பேசும் சக்தியற்றவை ஆகிவிட்டன. ஏனெனில் விடுதலைப் புலிகள் என்ற மையத்தை சுற்றியே அவர்களுடைய அரசியல் இருந்து வந்தது. இப்பொழுது அந்த மையம் இல்லை. எனவே ஆதரிப்போருக்கும் பேரம் பேசும் சக்தி இல்லை. எதிர்ப்போருக்கும் இல்லை. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தமது பேரம் பேசும் சக்தியை மறு சீரமைத்து மீளக்கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. பேரம் பேசும் சக்தியை இழந்துவிட்ட இரு பிரதான போக்குகளையும் சாராது, அதே சமயம் தமது மெய்யான பேரம் பேசும் சக்தி எது என்பதை அடையாளம் கண்டு அதிலிருந்து தொடங்கினால்தான் இனி ஈழத்தமிழர்களுக்கு அரசியல் எதிர்காலம் உண்டு.

இப்படிப் பார்த்தால் மூன்றாவது போக்கிற்கே பிரகாசமான அரசியல் எதிர்காலம் உண்டு. ஆயுதப் போராட்டத்தின் சாணக்கியமற்ற தீர்க்க தரிசனமற்ற முடிவுகளால் பல துண்டுகளாக உடைந்து சிந்திச் சிதறி நீர்த்துப் போயிருக்கும் ஈழத்தமிழர்கள் மீண்டும் ஒரு சக்தியாக ஒன்று திரண்டெழுவது என்பது இந்த மூன்றாவது போக்கினூடாக மட்டுமே சாத்தியப்படும்.

விடுதலைப்புலிகள் விட்ட இடத்தில் இருந்து தொடங்கும் எவரும் புலிகள் மீதான குற்றச்சாட்டுகளிற்கு பதில் சொல்லவேண்டியிருக்கும். அதோடு புலிகளைத் தடைசெய்திருக்கும் நாடுகளில் சட்டச் சிக்கல்களிற்கும் முகங்கொடுக்க வேண்டி வரும். அதே சமயம் புலி எதிர்ப்பையே ஒரு அரசியலாக செய்து வந்தவர்களும் புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஏறக்குறைய ஏழு மாதங்கள் ஆகிவிட்ட ஒரு காலச் சூழலில் ஈழத்தமிழர்களின் பேரம் பேசும் சக்தி இனியும் நீர்த்து போகக்கூடாது என்ற ஒரு மகத்தான பொது இலட்சியத்தின் கீழ் ஒன்று திரள முன்வரவேண்டும்.

இதற்கு முதலில் செய்யப்படவேண்டியது, இறந்தகாலத்தை வெட்டித்திறந்து பார்ப்பதுதான். அதாவது ஒரு பிரேதப்பரிசோதனை - போஸ்ட்மோட்டம்.

இறந்தகாலத்தை ஈவிரக்கமின்றி விமர்சிக்கும் ஓர் அரசியல் ஒழுக்கம், ஓர் அறிவியல் ஒழுக்கம், ஒரு கலை இலக்கிய ஒழுக்கம், ஒரு ஊடக ஒழுக்கம்.

இறந்தகாலத்தை காய்தல் உவத்தல் இன்றி விமர்சித்தால் அன்றி இனி ஈழத்தமிழர்களுக்கு எதிர்காலமே கிடையாது. அத்தகைய ஒரு பிரேதப் பரிசோதனைக்குத் தேவையான துணிச்சலற்ற எவரும் ஈழத்தமிழர்களுக்கு தீர்க்கதரிசனம் மிக்கதொரு எதிர்காலத்தை காட்டமுடியாது.

பிரேதப் பரிசோதனை என்ற சொல் இங்கு மிகப்பரந்த ஆழமான அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகிறது. கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு வரை யுத்தகளத்தில் காட்டப்பட்டதை விடவும் மிக உயர்வான வீரத்தையும் தியாகத்தையும் இது வேண்டி நிற்கிறது. அதாவது பிரேதப் பரிசோதனை செய்யும் ஒருவர் தேவைப்பட்டால் தன்னுடைய தலையையும் வெட்டித் தராசில் வைத்து நிறுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த நோய்க்கூறான அம்சங்கள் அனைத்தும் கண்டறியப்படவேண்டும். ஒவ்வொரு தமிழரும் தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்து கொள்ளவேண்டும். முழுச் சமூகமுமே தன்னை ஒரு கூட்டுச் சுயவிமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டும். அதற்கு வேண்டிய களங்கள் எல்லாத் துறைகளிலும் எல்லா தளங்களிலும் அரசியல் அறிவியல் கலை இலக்கியம் ஊடகம் போன்ற எல்லாத்துறைகளிலும் திறக்கப்பட வேண்டும்.

மே 17 -ற்கு முன்பு வரை விடுதலைப் புலிகளை விமர்சிப்பதை ஓர் அரசியல் ஒழுக்கமாகவோ அல்லது அறிவியல் மற்றும் கலைஇலக்கிய ஒழுக்கமாகவோ கொண்டிருந்த அனைவரும் அணி தோல்விகள் அற்ற ஓர் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமான விமர்சனவெளியாக அதை விரிவுபடுத்த வேண்டும்.

அச்சத்தின் காரணமாகவோ அல்லது யுத்தத்தின் வெற்றிக்காக தியாகம் செய்யப்படும் ஒன்றாகவோ வெளிப்படையாக அபிப்பிராயம் கூறா ஓரியல்பு ஆயுதப்போராட்டம் நெடுகிலும் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுதும் அதாவது மே 17-ற்குப் பின்னரும் யாராவது வன்னி அகதி ஒருவர் தன்னுடைய கசப்பான அனுபவங்களில் இருந்து கதைக்கும் போது ஏனைய தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அதை வரவேற்பதில்லை. முள்ளிவாய்க்கால் வீழ்ச்சியோடு நொந்து போயிருக்கும் ஒர் அரசியற் சூழலில் இது போன்ற விமர்சனங்கள் எதிர்த்தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கே உதவக் கூடும் என்று ஓர் அபிப்பிராயம் படித்த தமிழர்களில் ஒரு பிரிவினரிடம் காணப்படுகிறது. இது வரை இருந்ததோடு சேர்த்து இன்னும் சிறிது காலத்திற்கு மௌனமாக இருந்தால் என்ன என்றும் கேட்கப்படுகிறது. குறிப்பாக இப்படி அபிப்பிராயப்படுவோரில் அநேகர் மே 17-ற்கு முன்புவரை விடுதலைப்புலிகளை கடுமையாக விமர்சித்து வந்தவர்கள் என்பதை இங்கு முக்கியமாக சுட்டிக்காட்ட வேண்டும்.

தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு பெரும் போக்கே நிலவுகிறது. விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற முடியாது போனதால் வந்த குற்றவுணர்ச்சியின் பாற்பட்ட ஒரு கழிவிரக்கமே இதுவென்று சிலர் சொல்கிறார்கள். வேறு சிலர் ஈழம் மறுபடியும் தமிழகச் சந்தைகளில் பண்டமாக விற்கப்படுகிறது என்கிறார்கள். எதுவோ எதன் காரணமாக ஈழப்போரில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டார்களோ அதைக்குறித்த வாதப்பிரதிவாதங்களிற்கான ஒரு பகிரங்க அரங்கு பெருந்திரள் ஜனப்பரப்பில் இதுவரையிலும் திறக்கப்படாதிருப்பது மிகவும் மோசமானது. இப்படியே போனால் ஈழத்தமிழர்கள் தங்களுடைய தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்பது எப்போது? விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் தோன்றியிருக்கும் கழிவிரக்கம்; கைவிடப்பட்டதான உணர்வு; எதிர்த்தரப்பிற்கு மேலும் வெற்றிகள் கிடைத்து விடக்கூடாது என்ற தவிப்பு போன்றவைகள் காரணமாக கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாக சமூகத்தின் மீது கவிந்து படிந்திருக்கும் ஒரு கனத்த மௌனம் மேலும் தொடரப்படும் ஓர் ஆபத்து தென்படுகிறது.

தமிழ்ச்சான்றோர், ஆய்வாளர்கள், கலை இலக்கிய கர்த்தாக்கள் மற்றும் ஊடகக் காரர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு இந்த மௌனத்தை உடைத்தெறியவேண்டும். உலகையே வியக்கவைத்த தமிழ்வீரமும், தியாகமும் ஏன் காலாவதியாகின, ஏன் வீணாயின என்ற கேள்விக்கு விடை காணப்படவேண்டும். இந்த கால்நூற்றாண்டுக்கு மேலான மௌனம் உடைக்கப்படாத படியால்தான் ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் துலக்கமற்று காணப்படுகிறது. எனவே ஈழத்தமிழர்கள் இனியும் மௌனமாயிருக்க கூடாது. இப்போது நிலவும் இடைமாறு காலகட்டத்தை சுயவிசாரணைக் காலமாக, சுயவிமர்சனக் காலமாக மாற்றி இறந்தகாலத்தை வெட்டித்திறக்கவேண்டும்.

இறந்த காலத்தில் வாழ்தல் அல்லது மம்மியாக்கம் செய்யப்பட்ட நம்பிக்கைகளுடன் வாழ்தல் என்பது ஒரு சமூகத்தை அந்த இறந்து போன நம்பிக்கைகளோடு சேர்த்து அழுகச் செய்துவிடும். இறந்தகாலத்தில் வாழ்தல் என்பது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை தோல்வியில் வாழ்தல்தான். தோல்விக்கு காரணமான கிருமிகளுடன் சேர்ந்து வாழ்தல்தான். எனவே இறந்தகாலத்தை சரியானபடி எடை போடவேண்டும் அப்படி செய்தால்தான் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் திட்டமிடலாம். அதற்கு முதலில் துணிந்து பிரேதப் பரிசோதனையில் இறங்கவேண்டும். இறந்து போனவர்களை மறந்து போகாமலிருக்கவும் இதை உடனடியாக செய்யவேண்டும். இறந்து போனவர்களுக்கு வரலாற்றில் உரிய இடத்தையும் உரிய கௌரவத்தையும் கொடுப்பதற்காகவும் இறந்தகாலத்தை சரியானபடி எடைபோடவேண்டும்.

தற்பெருமைமிக்க எல்லாச்சிறிய இனங்களிடமும் உள்ளதுபோல ஈழத்தமிழர்களிடமும் ஒரு வியாதி உண்டு. அதாவது வெற்றிகளிற்கெல்லாம் உள்ளேயிருக்கும் சக்திகள் போற்றப்படும். அதே சமயம் தோல்விகளிற்கெல்லாம் புறச்சக்திகள் திட்டித் தீர்க்கப்படும் அல்லது புறச்சக்திகளின் கைக்கூலிகளாக மாறியதாகக் குற்றம் சாட்டப்படும் அகச்சக்திகள் திட்டித் தீர்க்கப்படும். இந்த இடத்தில் ஈழத்தமிழர்கள் ஒன்றை மனந்திறந்து ஒப்புக்கொள்ளவேண்டும். வீழ்ச்சிகளிற்கெல்லாம் காரணம் புறச்சக்திகள் என்பதை விடவும் புறச்சக்திகளால் தோற்கடிக்கப்படும் அளவிற்கு அகச்சக்திகள் தீர்க்க தரிசனமற்றும் சாணக்கியமற்றும் நெகிழ்ச்சியற்றும் மூடுண்டும் காணப்பட்டன என்பதே.

எனவே ஒரு முழு அளவிலான மனந்திறந்த துணிச்சலான பிரேதப் பரிசோதனையே இப்போதுள்ள உடனடித் தேவை. இனியும் இறந்தகாலத்தை ஒரு இராணுவ ரகசியம் போல மூடிவைத்திருக்க முடியாது.

குறிப்பாக ஒப்பீட்டளவில் ஜனநாயகச் சூழலில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களும், தமிழ்நாட்டு சான்றோரும் அதை உடனடியாகத் தொடங்கலாம்.

தமிழ்ச்சக்தி சிதறிக்கிடக்கிறது. தமிழ்ப்பலம் சிதறுண்டு கிடக்கிறது. தமிழர்கள் தங்களை புத்திசாலிகள் என்றும் தீரர்கள் என்றும் சுழியர்கள் என்றும் தந்திரசாலிகள் என்றும் தற்பெருமை பேசியதெல்லாம் வீண். எந்தவொரு புத்திசாலியான சிறிய இனமும் தன்பலத்தை இப்படி சிந்திச் சிதறியதில்லை. எந்தவொரு புத்திசாலியான சிறிய இனமும் இப்படி கூறுபட்டுக் கிடந்ததில்லை. எந்த ஒரு புத்திசாலியான சிறிய இனமும் சகோதரர்களைப் பகைத்ததுமில்லை அயலவர்களைப் பிழையாகக் கையாண்டதுமில்லை. எந்த ஒரு புத்திசாலியான சிறிய இனமும் இப்படி இறந்தகாலத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு கிடந்ததும் இல்லை.

அறிவற்ற வீரம் என்றைக்குமே வென்றதில்லை. தன்பலம் எதுவென்று தெரியாத எந்த ஓரினமும் விடுதலைக்கு தகுதியற்றதே.

வீரதீர சாகசங்களின் காலம் எப்பொழுதோ முடிந்துவிட்டது. விளைவுகளே வழிவகைகளை நியாயப்படுத்தி விடும் என்ற வாதமும் தோற்றுப் போய்விட்டது. இது அறிவின் யுகம். இப்பொழுது அறிவுதான் எல்லாமும். உயிரை ஆயுதமாகப் பாவித்த ஒரு சிறிய இனம் இனி அறிவை ஆயுதமாகப் பாவிக்கவேண்டும்.

அறிவுதான் ஆயுதம்!
அறிவுதான் சக்தி!
அறிவுதான் பலம்!
அறிவுதான் நிரந்தரம்!
புத்திமான் பலவான்!

- நிலாந்தன் (nillanthan@gmail.com )

Thursday, 19 November 2009

என்னுடைய தேசிய இனம்: இலங்கை அகதி - ஷோபாசக்தி

நேர்காணல்: மீனா

ஈழத்தின் மரணப் போராட்டங்களை; சாதிய, இன, அதிகார வெறிகளால் மக்களுக்கு நேர்ந்த அவலங்களை, பிறந்த மண்ணைப் பிரிந்த அகதியின் மனநிலையை; அழுகுரலெடுக்கும் பெருஓலங்களாலோ, ரத்தக் கண்ணீர்களாலோ அல்லாமல் அசாதாரண எழுத்துகளால் உறைய வைத்து நமது நனவிலியைப் பிடித்தாட்டிய தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லி, ஷோபாசக்தி. நவீன இலக்கியத்தில் தனி முத்திரையைப் பதித்ததோடு இடதுசாரி அரசியல் வழிநின்று அரச பயங்கரவாதத்துடன் புலிகளின் பயங்கரவாதத்தையும் தொடர்ந்து கண்டித்து வருகிற வகையில், புலிகளைப் புனிதத் திருஉருக்களாக கட்டமைப்பவர்களால் உட்செரிக்க இயலாதவர். பதினைந்து வயதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாக தமது அரசியலைத் துவக்கி இன்று புலம்பெயர் சூழலில் மாற்று அரசியலை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார். பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழர்களைக் காப்பதற்கே யுத்தம் என்று பச்சையாய் புளுகி மீண்டுமொரு இனப்படுகொலையை அரங்கேற்றிய ராஜபக்சே அரசு, யுத்ததிற்கு பிறகும் பயங்கரவாதத்தின் கோரப்பசிக்கு தமிழர்களைத் தின்று தீர்க்கிறது. இந்நிலையில், ஈழத்தமிழரின் சனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்து குரலுயர்த்தி வருகிற ஷோபாசக்தியோடு  ஈழத்தமிழரின் நிலைகுறித்தும், தமிழ்ச்சூழலில் நடைபெற்று வருகிற ஈழ அரசியல் குறித்தும் 'அம்ருதா' இதழிற்காக உரையாடினோம். அவற்றிலிருந்து..

மீனா: போர்க்குற்றங்களைத் தொடர்ந்தும் தமிழ் இளைஞர்களின் நிர்வாண படுகொலைகள், திசநாயகம் கைது என அடுக்கடுக்காய் இனவெறி வெட்ட வெளிச்சமாகிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இதனை கண்டித்திருக்கின்றன. போர்க்குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இத்தகைய அழுத்தங்கள் தொடர்வதன் மூலம் தமிழர்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமா?

ஷோபாசக்தி: 'சானல் நான்கு' தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அந்த வீடியோ ஆதாரங்களைப் பொய் என்கிறது இலங்கை அரசு. எந்த கண்டனத்திற்கும் அஞ்சாமல் திசநாயகத்தின் கைதையும்  நியாயப்படுத்தி வருகிறது. சர்வதேச சமூகத்தின் மனிதாபிமானக் குரலை ராஜபக்சே மயிரளவும் மதிப்பதில்லை. சமீபத்தில் நாட்டிலிருந்து யுனிசெப் அதிகாரியும் வெளியேற்றப்பட்டார். இலங்கை அரசின் பயங்கரவாதம் எந்த அழுத்ததிற்கும் வளைந்து கொடுக்காது.

மீனா: ஈழத்தில் தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்கள் வசதிகளுடன் இருப்பதாகவும் அவர்களுக்கு அரசு போதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் இந்து என்.ராம் போன்றவர்கள் சொல்கிறார்களே?

ஷோபாசக்தி: கிடையாது. அதெல்லாம் சுத்த அயோக்கித்தனமான பேச்சு. எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தால் கூட மக்களை முகாமில் வைத்திருக்க மகிந்த ராஜபக்சேவிற்கு உரிமை கிடையாது. மக்களை அவர்களது சொந்த நிலங்களிலிருந்து பிரித்து முகாம்களில் கட்டாயமாக வைத்திருப்பதை அனுமதிக்கவே முடியாது. கண்ணிவெடி அச்சுறுத்தல் என்றெல்லாம் அரசு சொல்வது அப்பட்டமான பொய். கண்மூடித்தனமாக விமானங்களிலிருந்து குண்டு வீசியும் எறிகணைகளை ஏவியும் மக்களைக் கொன்றவர்கள், கண்ணி வெடியிலிருந்து மக்களைப் பாதுகாப்பது பற்றியெல்லாம் பேசுவது நம்பக்கூடியதல்ல. மகிந்த அரசு நடத்தி முடித்தது ஒரு இனப்படுகொலை. அந்த இனப்படுகொலை இப்போது வெவ்வேறு வடிவங்களில் நடத்தப்படுகிறது. அதிலொன்றுதான் இந்தக் கட்டாயத் தடுப்பு முகாம்கள். இந்த முகாம்களிலிருந்து மக்களை விடுவிக்குமாறு அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு பிரசார இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. அத்தகைய பிரசார இயக்கங்களை வலுப்படுத்துவதும் அந்த மக்களின் விடுதலைக்கான உடனடி வழிகளைக் கண்டடைவதும் நம் முன்னாலிருக்கும் இன்றைய முதலாவது சவாலும் பணியும்.

மீனா: தடுப்பு முகாம்களில் இருக்கும் அகதிகளுடன் நீங்கள் பேசியிருக்கிறீர்களா, அவர்களின் நிலை எப்படியிருக்கிறது?

ஷோபாசக்தி: எனது உறவினர்கள் அங்கே இருக்கிறார்கள். அவர்களில் இளவயதினர் பணம் செலுத்தித் தங்களை அங்கிருந்து மீட்க உதவி செய்யுமாறு மன்றாடுகிறார்கள். இராணுவத்திற்கோ அல்லது இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் தமிழ் ஆயுத இயக்கங்களைச் சேர்ந்தவர்களிடமோ லஞ்சம் கொடுத்தால் அவர்கள் முகாம்களிலிருந்து அழைத்துச் சென்று வெளியே விடுகிறார்கள். ஆளையும் கொண்டுபோய்ச் சேர்க்கும் இடத்தையும் பொறுத்து மூன்று இலட்சத்திலிருந்து பத்து இலட்சம் வரை லஞ்சம் வாங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் அங்கே கைதுகள் நிகழ்கின்றன. ஒரு முகாமில் நாளொன்றுக்கு முப்பது வரையான இளம் வயதினர் கைது செய்யப்படுகிறார்கள். எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; அவர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்; குறிப்பாகக் கைதுசெய்யப்படும் யுவதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படியிருக்கின்றன என்ற எந்த அறிக்கையும் தகவலும் அரசால் வெளியிடப்படுவதில்லை. அவை நலன்புரி முகாம்களல்ல, சிறைச்சாலைகள்.

மீனா: சொந்த மண்ணிலேயே கைதிகளாய் அடைக்கப்பட்டிருக்கும் இந்த அப்பாவி மக்கள் புலிகளின் நிர்வாகத்தில் இருந்த போது எப்படியிருந்தார்கள்?

ஷோபாசக்தி: புலிகளிடம் மக்கள் அனுபவித்த துன்பங்கள் ஒன்றும் இந்தத் துன்பங்களிற்குக் குறைந்ததல்ல. 1990களிலிருந்தே புலிகளும் 'பாஸ்' என்றொரு நடைமுறையைத் திணித்துப் பணம் பெற்றுக்கொண்டுதான், தங்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்த இளவயதினரை வெளியேற அனுமதித்தார்கள். குழந்தைகளையும்  இளைஞர்களையும் கட்டாயமாக அரைகுறைப் பயிற்சி கொடுத்து யுத்த முன்னரங்கத்திற்கு அனுப்பிவைத்துச் சாகக் கொடுத்தார்கள். இயக்க விரோதிகள், துரோகிகள், சமூகவிரோதிகள், திருடர்கள், பாலியல் தொழிலாளர்கள் என்ற குற்றச்சாட்டுகளில் புலிகளால் கொன்றொழிக்கப்பட்டவர்களின் கணக்குத் தனியானது. ஆயிரக் கணக்கானோர் புலிகளின் பங்கர் சிறைகளில் நாயினும் கீழாக வதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். 2002க்குப் பிந்திய சமாதான காலத்தில் மட்டும் தங்களுக்கு ஒவ்வாத 400க்கும் மேற்ட்ட தமிழ் அரசியலாளர்களையும் எழுத்தாளர்களையும் அறிவுஜீவிகளையும் புலிகள் கொன்றிருக்கிறார்கள் எனத் துல்லியமாக அய்.நா. அவையின் சமூகப் பொருளாதரக் கவுன்சிலின் ஆய்வாளர் பிலிப் அல்ஸ்டன் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்.

மீனா: ஆனால், புலம்பெயர்ந்த தமிழர்களுக்காகவும் மெனிக் பண்ணையின் கம்பி வேலிக்குள் அடைபட்டுக் கிடக்கும் தமிழர்களுக்காகவும் ஆதரவாய் பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள், நீங்கள் குறிப்பிடுபவை பற்றியும் தொண்ணூறுகளில் புலிகளால் வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர்கள் பற்றியும் பேசுவதில்லையே, ஏன்?

ஷோபாசக்தி: பாரிசில் இருந்து வெளிவரும் 'ஈழமுரசு' பத்திரிக்கை 12 செப்டம்பர் 2009 இதழில், 'பாகிஸ்தான் அணுகுண்டு செய்வதற்கு இலங்கை முஸ்லீம்கள் உதவினார்கள்' என்று செய்தி வெளியிட்டு இருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. காலம்காலமாக தமிழ் தேசியவாதிகளும் -குறிப்பாக - புலிகளும், முஸ்லீம்கள் மீது திட்டமிட்ட முறையில் இனப்பகைமையை பிரசாரம் செய்து வருகிறார்கள். யாழ்ப்பாண சாதிய உணர்வு தலித்துகளை ஒடுக்கியதைப் போல தமிழ்த்தேசிய உணர்வு முஸ்லீம்களை ஒடுக்கியது. ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்க மறுப்பவர்களை ஆதிக்கத்தின் எடுபிடிகள் என்றல்லாமல் வேறெப்படி புரிந்துகொள்வது.

மீனா: இப்போது, இலங்கை அரசோடு இயைந்துபோய் தமிழர்களிற்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளுதல் என்றவாறாக ஈழத் தமிழ் அறிவுஜீவிகளில் ஒரு பகுதியினர் பேசுகிறார்களே?

ஷோபாசக்தி: ஆயுதப் போராட்டத்தினால் கடந்த முப்பது வருடங்களில் நாம் சந்தித்த இழப்பு மிகப் பெரிது. ஒரு சின்னஞ் சிறிய இனமான எங்களால் தாங்க முடியாத அளவிற்கு இழப்புகள் ஏற்பட்டுவிட்டன. ஆயுதப் போராட்டம் என்பது இப்போது இலங்கையில் சாத்தியப்படாத ஒன்று. சர்வதேசப் புறச் சூழல்களும் ஆயுதப் போராட்டத்திற்குச் சாதகமாயில்லை. எனவே, வேறுவகையான அரசியல் முன்னெடுப்புகளாலும் போராட்ட முறைமைகளிற்குள்ளாகவும் அழுத்தங்கள், பேச்சுவார்த்தைகள் ஊடாகவுமே இனி ஈழத் தமிழர்களின் உரிமைக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், இலங்கை அரசு தனது பேரினவாத அரசியல் என்ற நிலையிலிருந்து கீழிறங்காதவரை அரசோடு இயைந்துபோவது என்பதெல்லாம் அயோக்கித்தனம். இந்தப் பாசிச அரசை எந்த விதத்திலும் நியாயப்படுத்தும் போக்குகள் ஈழத் தமிழர்களிற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இலங்கை மக்களிற்குமே இழைக்கப்படும் துரோகம்.

மீனா: போராட்டத்தை முன்னெடுக்க சமீபமாய் நாடு கடந்த அரசாங்கம் அமைப்பது பற்றி பேசப்பட்டு வருகிறது. இந்த முறை எவ்வளவு சாத்தியம்?

ஷோபாசக்தி: எங்கள் மீது தன்னிச்சையாக அரசையும் ஆதிக்கத்தையும் ஏற்படுத்தும் அதிகாரத்தை இவர்களிடம் யார் கொடுத்தார்கள்? இவர்களின் நாடுகடந்த அரசின் அரசியல் பண்பு என்ன? வலதா, இடதா, இல்லைப் பாசிசமா? முதலில் அதைச் சொல்லட்டும். எங்கள் ராஜினி திரணகமவையும் விஜயானந்தனையும் கொன்றவர்களுடன் சேர்ந்து பீற்றர் சால்க்கும் கரண் பார்க்கரும் எங்களுக்கு அரசமைத்துக் கொடுக்கப் போகிறார்களா? புலிகளின் போராட்டம் ஆயுதப் போராட்டமாயிருந்தாலென்ன, அரசியற் போராட்டமாயிருந்தாலென்ன அவர்களின் அரசியலில் அறம் வந்து சேரும்வரை அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேசமெங்கும் சிதறிக்கிடக்கும் புலிகளின் சொத்துகளையும், புலிகளும் அவர்களின் முகவர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் சுகித்த அதிகாரங்களையும் காப்பாற்றிக்கொள்ளவே இந்த நாடுகடந்த அரசாங்கம் என்ற கண்துடைப்பு நாடகம் நடத்தப்படுகிறது.

மீனா: இப்பொழுதும் மக்களிடம் பணம் வசூலிப்பது தொடர்கிறதா?

ஷோபாசக்தி: இன்றுள்ள சூழலில் புகலிடத்தில் கட்டாயக் காசு கேட்டால் சனங்களே காவற்துறையிடம் புலிகளைப் பிடித்துக் கொடுப்பார்கள். ஆனாலும், கடந்த பல வருடங்களாக புலம்பெயர் நாடுகளில் புலிகள் திரட்டிய ஏராளமான பணம் வர்த்தக நிறுவனங்களாகவும் இந்துக் கோயில்களாகவும் தொலைக்காட்சி, பத்திரிகை நிறுவனங்களாகவும் திரண்டு இருக்கிறது. இந்த நிறுவனங்கள் இப்போதும் இலாபம் சம்பாதித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இந்தப் பணத்தைக் பகிர்ந்துகொள்ளத்தான் வெளிநாட்டுப் புலிகள் இப்போது தமக்குள் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் புலிகள் மீது கொண்டிருந்த அச்சம் பெருமளவு நீங்கிவிட்டது. புகலிடப் புலிகள் தங்களுக்குள் தாங்களே அடித்துக்கொண்டிருப்பதால் புலிகள் மீது சனங்கள் கொண்டிருந்த கொஞ்சநஞ்ச அனுதாபமும் பயமும் காணமலேயே போய்விட்டது. இணையங்களைத் தொடர்ச்சியாகக் கவனிப்பவர்களால் புலிகளை முன்பு தீவிரமாக ஆதரித்த நபர்களே இப்போது இந்த வெளிநாட்டுப் புலிகளைக் கண்டித்துப் பேசுவதைத் தெரிந்துகொள்ள முடியும்.

மீனா: 'புலிகளின் வீழ்த்தப்பட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், அவர்களின் தவறுகளை விமர்சிப்பதால் இனிமேல் ஆகப்போவது ஒன்றும் இல்லை' என உங்களைப் போன்றவர்கள் பற்றி பரவலாக ஒரு கருத்து நிலவுகிறதே?

ஷோபாசக்தி: புலிகள் தாங்கள் மட்டும் அழியவில்லை. தங்களோடு சேர்த்து ஈழத் தமிழர்களின் அரசியல் உணர்வையும் அழித்துவிட்டுத்தான் போயிருக்கிறார்கள். கடந்த இருபத்தைந்து வருடங்களாகவே நமது மக்கள் அரசியலிலிருந்து புலிகளால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். மக்களுக்கு விமர்சனங்களேயில்லாமல் புலிகளை ஆதரிக்கும் ஒரு கடமையைத் தவிர வேறெந்த அரசியல் உரிமைகளையும் புலிகள் வழங்கவேயில்லை. ஈழத்து அரசியலில், ஒரு ஈழக் குடிமகனது அரசியல் உரிமை, பிரபாகரனின் சிந்தனைக்கும் கட்டளைக்கும் கீழ்ப்படிவது என்பது மட்டுமாகவே வரையறுக்கப்பட்டிருந்தது. புலிகள் ஆதரவைத் தவிர்த்து வேறெதையும் பேசும், எழுதும் உரிமைகள் துப்பாக்கி முனையில் மக்களிற்கு மறுக்கப்பட்டிருந்தன. புலிகளைத் தவிர வேறெந்த அரசியல் போக்குகளையும் புலிகள் தமது பரப்பில் அனுமதிக்கவில்லை. இதைப் புலிகள் ஏகபிரதிநிதித்துவம் என்றார்கள். நாங்கள் பாசிசம் என்றோம்.

சாதியொழிப்பு இயக்கங்கள், சீர்திருத்த இயக்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் எவையுமே அங்கே இயங்க அனுமதிக்கப்படவில்லை. புலிகளின் தடையை மீறிய போதெல்லாம் கம்யூனிஸ்டுகளும் தொழிற்சங்கவாதிகளும் மாற்று அரசியலாளர்களும் தலித் மக்களின் வழிகாட்டிகளும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் புலிகளால் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள். சிறைப்பிடிக்கப்பட்டு மனித நாகரிகமே இல்லாமல் நிர்வாணமாக வருடக்கணக்கில் தனிமைச் சிறைகளில் அடைக்கப்பட்டு வதைக்கப்பட்டார்கள். ஒரு வருடமல்ல, இருவருடமல்ல, இருபத்தைந்து வருடங்களாகப் புலிகள் இந்த அட்டூழியங்களைச் செய்தார்கள். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் கிளிநொச்சி வீழ்ந்த பிறகுதான் புலிகள் மக்கள் மீது ஒடுக்குமுறைகளை ஏவத்தொடங்கினார்கள் என்பதில்லை. அவர்கள் தங்கள் பிறப்பிலிருந்தே அப்படித்தானிருந்தார்கள்.

புலிகளிடம் அரசியலே இருக்கவில்லை. அவர்கள் சுத்த இராணுவவாதக் கண்ணோட்டத்துடன் இயங்கினார்கள் என்று இப்போது புதிது புதிதாய் சிலர் கண்டு பிடிக்கிறார்கள். ஆனால், அது தவறான கண்டுபிடிப்பு. புலிகளிடம் தெளிவான வலதுசாரி அரசியல் நிலைப்பாடும் மேற்கு ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாடும் கலாசார அடிப்படைவாதமும் இருந்தது. அவர்கள் நடத்திய இஸ்லாமியச் சுத்திகரிப்புக்குப் பின்னால் ஒரு உறுதியான குறுந்தமிழ்த் தேசிய அரசியலிருந்தது. அவர்களின் இத்தகைய படுபிற்போக்கான அரசியல் வேலைத்திட்டம் அரசியல் எதிரிகளையும் தங்களை மறுப்பவர்களையும் விமர்சிப்பவர்களையும் கொலை செய்வதன் மூலம் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் என்ற கேவலமான அரசியலில் அவர்களைக் கொண்டுவந்து நிறுத்தியது. எல்லாவித முற்போக்கு அரசியலையும் ஈழப் புலத்திலிருந்து துடைத்தெறிந்த புலிகள், அவர்களின் கொலை அரசியலை மட்டுமே அங்கே விட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்தக் குறுந்தமிழ்த் தேசியவாதக் கொலைகார அரசியலை செல்வாக்கு இழக்கச் செய்து, மாற்று அரசியலை நோக்கி நகருவதற்கு நம் மக்களிடம் நாம் புலிகளின் தவறுகளையும் அரசியலையும் நுணுக்கமாகத் தோலுரித்துக்காட்ட வேண்டியிருக்கிறது.

தவறுகளைப் பேசுவது, குற்றங்களைப் பட்டியலிடுவதற்காக மட்டுமல்ல; பாடங்களைக் கற்றுக்கொள்வதற்காகவும் தான்.

மீனா: ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு இனி உரையாடலுக்கு தயார் என புலிகள் அறிவித்திருக்கிறார்களே?

ஷோபாசக்தி: புலிகளுடைய இன்றைய அரசியல் பிரபாகரன் காலத்து அரசியலின் நீட்சிதான். ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு வேறுவழிகளில் போராடப்போகிறோம், எல்லோருடனும் உரையாடத் தயாராயிருக்கிறோம் என்ற அவர்களது அறிவிப்புகள் வெளியானாலும் அவர்கள் புலிகளின் கடந்தகால பிற்போக்கு அரசியலிலிருந்து தங்களது அரசியல் வேலைத்திட்டத்தை எவ்வாறு வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அவ்வகையான எந்தவொரு அரசியல் மாற்றத்தையும் அவர்களிடம் காண முடியவில்லை. அவர்கள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு மைய அரசியலுக்கு வந்தாற் கூட அவர்களது அரசியல் வேலைத்திட்டம் தமிழ்க் குறுந்தேசியவாத, வெறும் வலதுசாரி அரசியற் திட்டமாய் இருக்கும் வரையில் அவர்களின் அரசியல் மக்கள் விரோத அரசியலாகவேயிருக்கும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இன்று புலிகள் தங்களிடம் அரசியல் இருக்கவில்லை என்று சொல்வதை அவர்கள் ஏதோ தங்களது பிற்போக்கு அரசியலின் மீது அதிருப்திகொண்டு புதிய மாற்றத்தைக்கோரி பேசுவதாக நீங்கள் கருதவேண்டியதில்லை. தொடர்ச்சியாக அவர்களின் அறிக்கைகளையும் உரையாடல்களையும் நீங்கள் கவனித்துப் பார்த்தால், கடந்த காலங்களில் இந்திய அரசையும் மேற்கு நாடுகளையும் தாங்கள் சரியாக 'டீல்' செய்யவில்லை என்ற வருத்தத்திலேயே அவர்கள் பேசுவது தெரியும். அவர்கள் அரசியல் தோல்வியென்று தங்கள் 'டீல்கள்' தோல்வியடைந்ததையே குறிக்கிறார்கள். மற்றப்படிக்கு புலிகளின் கடந்த கால பிற்போக்கு அரசியலிலிருந்து அவர்கள் மீள்வதற்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை.

மீனா: புலிகள் இயக்கம் தனது தலைமைப் பொறுப்புகளில் தலித்துகளை அமர்த்தியிருந்தது. அதேவேளையில் செல்லன் கந்தையன், கணபதி ராசதுரை போன்றோர்களிடம் தனது ஆதிக்க முகத்தைக் காட்டியது. புலிகள் சாதியத்தை எப்படி எதிர்கொண்டதாக நினைக்கிறீர்கள்?

ஷோபாசக்தி: ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றிலேயே வெள்ளாளர்கள் அல்லாத ஒரு தலைமையாக உருவாகி ஒரு உடைப்பை ஏற்படுத்திய இயக்கம் புலிகள் இயக்கம்தான். எனது 'வசந்தத்தின் இடிமுழக்கம்' என்ற கட்டுரையில் இதை விரிவாகப் பேசியுள்ளேன். புலிகள் இயக்கத்தில் குறிப்பிட்ட காலம் செயற்பட்டவன் என்ற முறையில் இயக்கத்திற்குள் சாதி ஏற்றத்தாழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டதில்லை என்பதையும் என்னால் கூற முடியும். இயக்கத்தில் தனிநபர்கள் சாதிய உணர்வோடு எங்காவது வெளிப்பட்டிருந்தாலும் கூட அதை இயக்கத்தின் பொதுப் பண்பாக வரையறுக்க முடியாது. இயக்கத்தின் தலைமைப் பொறுப்புகளில் தலித்துகள் இருந்தார்கள் என்பதும் உண்மையே. புலிகள் குறிப்பிட்ட பகுதிகளில் குடிமைத் தொழில் முறையையும் ஒழித்திருந்தார்கள். இந்த உண்மைகளோடுதான் சாதியும் புலிகளும் என்பது குறித்துப் பேசமுடியும். ஆனால், புலிகள் சாதியொழிப்புப் போராட்டத்தை காத்திரமாகச் சமூகத்தளத்தில் முன்னெடுக்கவில்லை. அந்த முன்னெடுப்புகள் பெரும்பான்மையாயிருக்கும் ஆதிக்க சாதியினரிடமிருந்து தங்களை அந்நியப்படுத்திவிடும் என அவர்கள் கருதினார்கள். இதை அடேல் பாலசிங்கம் தனது சுதந்திர வேட்கை நூலில் ஒப்புக்கொண்டிருப்பதையும் நான் எனது கட்டுரையில் விரிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். சமூகத்தில் சாதிய முரண்கள் எழுந்தபோதெல்லாம் அங்கே எப்படிப் பிரச்சினைகளை ஊத்திமூடி அமைதியைக் கொண்டுவருவது என்றே புலிகள் முயற்சித்தார்களே தவிர அவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினரின் பக்கத்தில் நின்று அவர்களின் உரிமைகளிற்காகக் குரல் கொடுத்தார்களில்லை. புலிகளின் ஆட்சிக்காலத்திலேயே வடபுலத்தில் ஏராளமான கோயில்களும் பொது இடங்களும் தலித்துகளிற்கு மூடியே கிடந்தன. இவற்றைத் திறந்துவிடுவதற்கான அதிகாரம் புலிகளிடமிருந்தும் கூட அவர்கள் அதைச் செய்யவில்லை. குறிப்பாக இந்து மதத்திற்கும் சாதிக்குமான உறவுகள் குறித்தெல்லாம் அவர்கள் அக்கறையே காட்டவில்லை. அவர்களே இந்து மரபுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்கள். புலம்பெயர் நாடுகளில் புலிகள் இந்துக் கோயில்களை நடத்தினார்கள். இந்த அடிப்படையில்தான் புலிகள் மீது நான் விமர்சனங்களை வைத்தேன். நிலவும் சமூக ஒடுக்குமுறையைக் கண்டுகொள்ளாமலிருப்பது என்பது அந்த ஒடுக்குமுறையைக் காப்பாற்றுவது என்றுதான் பொருள்படும். தமிழீழம் கிடைத்த பின்பு உள்முரண்கள் தீர்க்கப்படும் என்று புலிகள் ஆதரவு அறிவுஜீவிகள் சொன்னதற்கெல்லாம் ஏதாவது பொருளிருக்கிறதா?

மீனா: சாதியத்தின் நச்சு வேர் ஆழப்புதைந்து கிளை பரப்பி இருந்த காலத்திலேயே 'அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபை', 'தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம்' ஆகியவை கலகக் கிளர்ச்சிகள் செய்து தங்கள் உரிமைகளை நிலைநாட்டின. இன்றைக்கு தலித்தியம் பெருவலிமை பெற்றிருக்கிறது. இந்த பின்புலத்தில் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் [அய்ரோப்பா] செயற்பாடுகள் எவ்விதமிருக்கின்றன?

ஷோபாசக்தி: சாதியொழிப்புக் குறித்து மேலும் சில உரையாடல்களைத் தொடக்கி வைத்தது என்பதற்கு அப்பால் மேலே நகர முடியாமல் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி ஒரு தேக்கத்தைச் சந்தித்திருக்கிறது. ஒரு சாதியொழிப்பு முன்னணி, சமூகத்தில் இருக்கக் கூடிய சாதிய ஒடுக்குமுறை வடிவங்களை மட்டுமே திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டு உயிர்வாழ முடியாது. அது சாதியொழிப்பிற்கான செயற்திட்டங்களை நோக்கி நகர வேண்டும். தலித் மக்களை அமைப்புமயப்படுத்த வேண்டும்.

சாதிய விடுதலை குறித்து நாம் பேசும்போது மற்றைய அடிமைத்தளைகள் குறித்த, குறிப்பாக இனஒடுக்குமுறை குறித்த, கேள்விகளை நாம் எதிர்கொள்ள நேரிடும். இந்தக் கேள்விகளை நேர்மையுடன் அணுகாதபோது ஒரு அரசியல் இயக்கத்தின் தேக்கம் தவிர்க்க முடியாததே. எனது அவதானிப்பில் இலங்கை தலித் முன்னணி அரசை அனுசரித்து நின்று ஏதாவது செய்துவிடலாம் என்று கனவு காண்கிறது. 40 வருடங்களிற்கு முன்பு தலித் தலைவர்களான எம்.சி.சுப்பிரமணியம் போன்றவர்கள் அரசோடு இணைந்து செயற்பட்டு தலித் மக்களுக்கான சில நலத்திட்டங்களை பெற்றுக்கொண்டதுபோல இப்போதும் செயற்படலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். எம்.சி.சுப்பிரமணியம் தன்னுடைய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பின்பலத்தோடு அரசோடு பேரம் பேசியவர். அப்போதைய அரசின் அமைச்சரவையில் கம்யூனிஸ்டுகளும் பங்கெடுத்திருந்தார்கள். கொல்வின்.ஆர்.டி.சில்வா, என்.எம்.பெரேரா, பீட்டர்  கெனமன் போன்ற இடதுசாரி நட்சத்திரங்கள் அரசின் போக்கைத் தீர்மானிக்கக் கூடியதாயிருந்த காலமது. ஆனால், இன்று அரசுப் பொறுப்பிலிருப்பவர்கள் அப்பட்டமான தரகு முதலாளிய கொள்ளைக்காரர்களும் இனப் படுகொலைக்காரர்களுமே என்பதை தலித் முன்னணி புரிந்துகொண்டு, தனது செயற்திட்டங்களை வகுக்காதவரை இந்தத் தேக்கத்திலிருந்து அதனால் வெளியே வரமுடியாது என்றே கருதுகிறேன்.

மீனா: நீங்கள் இலங்கை அரசின் உளவாளியென்றும், அரசிடமிருந்து பணம் பெறுகிறீர்கள் என்றும், தமிழகத்துப் பத்திரிகையாளர்களிடையே இலங்கை அரசிற்காக ஆள்பிடிக்கிறீர்கள் என்றும் தொடர்ந்து 'கீற்று' இணையத்தளத்தில் குற்றம் சாட்டப்படுகிறீர்களே?

ஷோபாசக்தி: இத்தகைய ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுகளாலும் அவதூறுகளாலும்  எதையும் சாதித்துவிட முடியாது. இந்தப் புறணி பேசும் கூட்டத்தால் என்னிலிருந்து ஒரு மயிரைக் கூட உதிர்த்துவிட முடியாது.

மீனா: உங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் பதில் சொல்லாமல் இருப்பது அந்த விமர்சனங்களை உண்மை என்று ஆக்கிவிடாதா?

ஷோபாசக்தி: நான் பொதுவிவாதங்களில் பங்கெடுக்க மறுப்பவனல்ல. என்னுடைய எழுத்தின் பெரும்பகுதி எதிர்வினைகளிலும் விவாதங்களிலும் பதில்களிலுமே செலவிடப்பட்டிருக்கிறது. எத்தகைய மாறுபட்ட கருத்துள்ளவருடனும், எனக்கு முற்று முழுதான எதிர் அரசியல் நிலைபாடுகளை உடையவருடனும் கூட நான் உரையாடவோ, விவாதிக்கவோ பின்நின்றதில்லை. அண்மையில் கூட 'வடலி' பதிப்பகம் தோழர்களின் ஏற்பாட்டில் தோழர்.தியாகுவுடன் மூன்று மணிநேரங்கள் ஈழத்து அரசியல் குறித்து விரிவாக விவாதித்திருந்தேன். அந்த உரையாடல் ஒரு நூலாக வடலி பதிப்பகத்தால் வெளியிடப்பட இருக்கிறது. ஆனால் உளவாளி, பணம் வாங்குகிறான் என்று புறணி பேசுபவர்களுடன் எல்லாம் என்னால் விவாதிக்க முடியாது. இத்தகையை இழிவான குற்றச்சாட்டுகளைப் பேசும்போது ஆதாரங்களுடன் பேசவேண்டும் என்ற யோக்கியமோ, ஆதாரமற்ற அவதூறுகளை இணையத்தில் அனுமதிக்கக் கூடாது என்ற கடப்பாடு இல்லாதவர்களிடமோ நான் எதை விவாதிக்க முடியும்.

என்னுடைய இத்தனை வருட காலத்து எழுத்தில், பேச்சில் இலங்கை அரசுக்கோ, இந்திய அரசுக்கோ ஆதரவான ஒரு வார்த்தையைக் கூட இந்தப் புறணி பேசும் கூட்டத்தால் காட்ட முடியாது. கடந்த பத்து வருடங்களில் இலங்கை அரச பயங்கரவாதத்தையும் யுத்தத்தையும் எதிர்த்து நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் உரைச் சித்திரங்களாகவும் என்னளவிற்கு இலக்கியத்தில் பதிவு செய்தவர்களும் யாருமில்லை. அதே தருணத்தில் நான் புலிகளையும் தமிழ்த் தேசிய வெறியையும் கடுமையாக விமர்சித்து எழுதும்போது அதை எதிர்கொள்ளத் திராணியோ, கருத்துப்பலமோ, தார்மீகமோ அற்றவர்கள் என்னை அரச அதரவாளன் என்று நியாயமற்ற முறையில் தீர்ப்பிடுவதன் மூலமே என்னுடைய புலிகளின் மீதான விமர்சனத்தை எதிர்கொள்ள முயலுகிறார்கள்.

மிகவும் நெருக்கிப் பிடித்து விவாதிக்கும்போது அவர்கள் தாங்கள் புலிகளை விமர்சனத்துடன் ஆதரிப்பதாகச் சொல்லி மழுப்புவதுமுண்டு. ஆனால், புலிகளைப் போன்ற வலதுசாரி அரசியல் சக்தியையும் பாசிஸ்டுகளையும் என்னால் விமர்சனத்தோடு என்றாலும் கூட ஆதரிக்க முடியாது. அண்மையில் ஒரு கட்டுரையாளர் குறிப்பிட்டது போல, பிரபாகரன் தான் இறப்பதற்குத் தயாராயிருந்த ஒரே காரணத்தால் ஆயிரக்கணக்கான மக்களைத் தன்னுடன் தடுத்து வைத்திருந்து கொல்லக் கொடுத்ததையெல்லாம், தப்பியோடி வந்த மக்களைச் சுட்டுக் கொன்றதையெல்லாம் விமர்சனத்துடன் ஆதரிக்குமளவிற்கு நான் கொடூரமானவனோ, அயோக்கியனோ கிடையாது.

இந்த நேர்காணல் வெளியானதும் கூட என்னை இலங்கை அரசின் ஆதரவாளன் என்றுதான் அவர்கள் எழுதப் போகிறார்கள். இந்த நேர்காணலில் நான் புலிகள் குறித்துச் சொல்வது மட்டும்தான் அவர்களது பிரச்சினையாயிருக்கும். என்னிடம் பணமோ, சாராயமோ பெற்றுக்கொண்டு என்னை நேர்காணல் செய்து பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறீர்கள் என்ற அவமானத்தை நீங்களும் சந்திக்க நேரிடும்.

மீனா: நீங்கள், உங்களை இலங்கைக் குடிமகன் என்று ஒரு கட்டுரையில் சொன்னதுகூட இங்கே சர்ச்சையாக்கப்பட்டது…

ஷோபாசக்தி: பா.செயப்பிரகாசம் தான் வழக்கம் போலவே 'நொள்ள' கண்டுபிடிந்திருந்தார். நான் என்னை இலங்கைக் குடிமகன் என்று அழைத்துக்கொள்ளாமல் பிரஞ்சுக் குடிமகனென்றா அழைத்துக்கொள்ள முடியும்?

செயப்பிரகாசம் தன்னை இந்தியக் குடிமகன் இல்லை என்று சொல்வது அவரின் உரிமை. ஆனால், நான் என்னை இலங்கைக் குடிமகன் என்று சொல்வதைக் கேள்வி கேட்பதற்கு அவருக்கு உரிமை கிடையாது. இலங்கை என்னுடைய நாடு. எனக்கு அந்த நாட்டில் ஒரு குடிமகனுக்குரிய எல்லா உரிமைகளும் இருக்கின்றன. ஆனால், அந்த உரிமைகள் எனக்கு இலங்கை அரசால் மறுக்கப்பட்டிருப்பதற்காக நான் என்னுடைய உரிமைகளை விட்டுக்கொடுத்திட முடியாது. என்னை இலங்கைக் குடிமகன் இல்லையென்று சொல்ல ராஜபக்சேவிற்கே உரிமை கிடையாது என்றபோது பா. செயப்பிரகாசத்திற்கு கேள்வி கேட்க எங்கிருந்து உரிமை வந்தது?

பா.செயப்பிரகாசம், தன்னை ஒரு சர்வதேச மனிதனாக உணருகிறேன் என்கிறார். அவரிடம் இந்தியக் கடவுச் சீட்டோ, அவருக்கு இந்திய அரசு இயந்திரத்துடன் வேறெந்தக் கொடுக்கல் வாங்கலோ இல்லாதிருக்கலாம். என்னுடைய நிலையும் அவரைப் போன்றதுதான். எனக்கும் இலங்கை அரசுடன் எந்தக் கொடுக்கல் வாங்கலும் கிடையாது; என்னிடம் இலங்கைக் கடவுச் சீட்டும் கிடையாது; பிரஞ்சுக் கடவுச் சீட்டும் கிடையாது. அகதிகளிற்கான பயணப் பத்திரம்தான் வைத்திருக்கிறேன். என்னுடைய தேசிய இனம் இலங்கை அகதி என்றுதான் எல்லா விமான நிலையங்களிலும் அலுவலகங்களிலும் தூதரகங்களிலும் பதிவுசெய்யப்படுகிறது. நான், செயப்பிரகாசம் போல குடியுரிமையை விரும்பித் துறந்தவனல்ல. அது என்னிடமிருந்து பிடுங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மறுத்தாலும் என்னுடைய குடியுரிமையை விட்டுக்கொடுக்க நான் தயாரில்லை.

மீனா: 'இந்திய அமைதிப்படை எங்களுக்கு ஆதரவாகத்தான் வந்தது. மாகாண சுயாட்சி அமைக்க வேண்டும் என்று வந்தது. நல்ல அதிகாரம் உள்ள சுயாட்சியாக இருந்தும் பிரபாகரன் அதை விரும்பவில்லை' என்று கருணா ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். இதன் பின்புலம் என்ன?

ஷோபாசக்தி: கருணா அரசாங்கத்தின் அங்கம். இலங்கை அரசின் குரலில் தான் இப்படி பேசி இருக்கிறார். மக்களுக்கு சொல்லொணா துயரங்களைக் கொடுத்தும், பாலியல் வன்கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டும் மூன்று வருடங்களுக்குள் இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்கள் இலங்கை அரசு இத்தனை வருடங்கள் செய்ததற்குக் குறைந்ததில்லை. அமைதிப்படை, புலிகளையும் அழிக்கக் கருதியே தொழிற்பட்டது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் ஆளும் வர்க்க நலன் தான் கருத்தில் கொள்ளப்பட்டதே தவிர, மக்களின் நலன் அல்ல. கருணாவின் குரல் தமிழர்களின் குரல் கிடையாது. அது இலங்கை அரசாங்கத்தின் குரல்

மீனா: ஆனால், இப்பொழுதும் இந்தியா மீதான நம்பிக்கை சில அறிவுஜீவிகளால் வளர்த்தெடுக்கப்படுகிறதே?

ஷோபாசக்தி: இந்திராகாந்தியின் காலந்தொட்டே இந்திய அரசு ஈழப்போராளிகளை இலங்கை அரசிற்கு அழுத்தங்களைக் கொடுக்கும் அமைப்புகளாக வைத்திருந்து, இலங்கை அரசைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க விரும்பியதே அல்லாமல், அது தனிநாட்டுக் கோரிக்கைக்கு எப்போதும் ஆதரவாயிருக்கவில்லை. இந்திய அரசின் அழுத்தங்களிற்குப் புலிகள் பணிய மறுத்தபோது அது போராகவும் வெடித்து, இந்திய அமைதிப்படை ஈழத்து மக்களைக் கொன்றும் குவித்தது. இலங்கை அரசு முற்றுமுழுதாக இந்தியாவிற்கு அடிபணிந்தபோது அது இலங்கை அரசிற்காக ஒரு போரையும் வெற்றிகரமாக நடத்திக் கொடுத்திருக்கிறது. அந்த வெற்றிக்கான விலையை இந்தியா இனித்தான் இலங்கை அரசிடம் கேட்கயிருக்கிறது. முழு இலங்கையும் இந்தியப் பெருமுதலாளிகளின் காலனியாவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது.

ஈழத்தமிழர்கள், இந்திய அரசின் நண்பர்கள்; ஈழம் அமைவதுதான் இந்தியாவிற்குப் பாதுகாப்பு; இந்தியா சிதறாமல் இருப்பதற்கு இந்திய அரசுக்கு ஈழத்தமிழர்களை விட்டால் வேறு மார்க்கமில்லை என்றெல்லாம் கவிஞர் கி.பி.அரவிந்தன் அண்மையில் ஒரு இதழில் சொல்லியிருப்பதைப் படித்திருப்பீர்கள். இது அவருடைய கருத்து மட்டுமல்ல. புலிகள் ஆதரவாளர்களில் பலர் இப்படித்தான் சொல்லி வருகிறார்கள். இவர்கள் பிராந்திய வல்லரசு என்னும் இந்தியாவின் ஆக்கிரமிப்புப் பாத்திரத்தைப் புரிந்துகொள்ளாமல் இதைப் பேசவில்லை. காஷ்மீரும் வடகிழக்கு மாநிலங்களும் இந்தியவிலிருந்து சிதறினால் இவர்கள் எதற்குக் கவலைப்பட வேண்டும். இந்திய வல்லரசைப் பாதுகாப்பதா ஈழத் தமிழர்களின் வேலை? இதென்ன கோணல் கதை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.விற்குப் பரிந்து பேசியது, சங்கராச்சாரியைச் சந்தித்து ஆசி பெற்றது, கோவையில் இந்து முன்னணியினரின் விநாயகர் ஊர்வலத்தில் கலந்துகொண்டு ஈழத்தில் இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள் என சிவாஜிலிங்கம் எம்.பி. பேசியது, எல்லாவற்றையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்திய மத்திய அரசை அதன் முதலாளிய இந்துத்துவ ஆதிக்க சாதிப் பண்புகளுடன் நாம் புரிந்துகொள்ளும்போது இந்திய அரசிற்கு ஈழத்தமிழர்கள் நண்பர்கள் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. இந்திய அரசும் எக்காலத்திலும் ஈழத்தவர்களிற்கு நண்பனாய் இருக்கப் போவதும் கிடையாது

மீனா: தமிழீழம் சாத்தியமில்லை என்று நீங்கள் சொன்னதையும் கி.பி. அரவிந்தன் விமர்சித்திருக்கிறாரே?

ஷோபாசக்தி: என்னத்த விமர்சித்தார்! "நரிகள் ஊளையிடுவதால் சூரியன் மறைந்துவிடாது" என்று சொல்லியிருக்கிறார். இதெல்லாம் ஒரு அரசியல் விமர்சனமா? தமிழீழம் சாத்தியமெனில் அதைத் தடுக்க நான் யார்? அதற்கு எனக்கு என்ன சக்தியிருக்கிறது. இன்றைய இலங்கை, இந்திய மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு நான் சாத்தியமில்லை என்றேன். தமிழீழம் சாத்தியம் என நம்பும் அரவிந்தன் அதற்கான தருக்கங்களை முன்வைத்துத் தனது கருத்தை நிறுவவேண்டும். அதைவிடுத்து இந்த நரி, நாய் உவமையெல்லாம் பேசி இன்னும் இன்னும் மக்களை ஏமாற்றலாமென்றும், கொல்லக் கொடுக்கலாம் என்றும் அவர் கருதக்கூடாது.

மீனா: ஈழத் தமிழர்களிற்கு ஆதரவாகத் தமிழகத்தில் எழும் குரல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஷோபாசக்தி: நன்றியுடன் பார்க்கிறேன். ஆனால், மனிதாபினம், இனவுணர்வு இவற்றின் அடிப்படையில் எழுந்த குரல்கள் அரசியல்ரீதியாகச் சரியாக ஒன்றிணைக்கப்படவில்லை. அவ்வாறு ஒன்றிணைந்த சில தருணங்களில் அவர்கள் தவறான தலைமைகளால் வழிநடத்தப்பட்டார்கள். ஈழம் கிடைப்பதற்கு ஜெயலலிதாவிற்கு ஓட்டுப் போடுங்கள் என்றளவிற்குத்தான் அந்தத் தலைமைகளின் அரசியல் யோக்கியதையும் இருந்தது. வெட்கமாயில்லையா?

ஈழத்து மக்களிற்கு ஆதரவாய் எழுந்த குரல்களை ஒரே மாதிரி மதிப்பிடுவதை நான் என்றைக்குமே செய்யப் போவதில்லை. வெறும் புலி ஆதரவாளர்களிடமிருந்தும் புலி ரசிகர்களிடமிருந்தும் விலகி நின்று ஈழத் தமிழ் மக்களிற்காகப் போராடிய சக்திகளும் தனிநபர்களும் இருக்கிறார்கள். அந்தக் குரல்கள் எங்களின் பாடுகளின் பொருட்டு இன்னும் வலுக்க வேண்டும். இந்தியாவில் இவர்கள்தான் ஈழத்துத் தமிழர்களின் நட்புச் சக்திகளே தவிர, கி.பி.அரவிந்தன் சொன்னது மாதிரி இந்திய அரசு இயந்திரமல்ல.

மீனா: புலிகளே தங்கள் தலைமையின் இழப்பை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், "பிரபாகரன் உயிருடன் நலமாக இருக்கிறார். மீளெழுச்சி கொண்டு அவர் தலைமையில் போராடுவோம்" என்கிறார் பழ.நெடுமாறன்; "ஐந்தாம்கட்ட ஈழப்போர் வெடிக்கும், அது பிரபாகரன் தலைமையில் நடக்கும்" என்கிறார் சீமான். இவையெல்லாம்…?

ஷோபாசக்தி: இது அடுத்தவனைச் சாகக் கொடுத்துவிட்டு அந்தப் பிணம் எரியும் நெருப்பில் வெளிச்சம் பெறவிரும்பும் பேச்சு. உருத்திரகுமாரன் போன்றவர்களே ஆயுதப் போராட்டம் குறித்துப் பேசாமல் வேறு சாத்தியங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, இவர்கள் அய்ந்தாம் கட்ட ஈழப்போர் என்று பேசுவதையெல்லாம் யார் நம்பப் போகிறார்கள்? யார் நம்பினாலும், ஈழத் தமிழர்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். பிரபாகரன் வந்து படை நடத்துவார் என்று இன்னமும் பேசிக்கொண்டிருக்கும் பொய்யர்களின் பேச்சுக்கெல்லாம் பெறுமதி ஏதுமில்லை. 'உருட்டும் புரட்டும் சிரட்டையும் கையும்' என்றொரு பழமொழி ஈழத்தில் உண்டு

மீனா: தமிழர்கள், தலித்துகள், இஸ்லாமியர்கள், மலையக மக்கள் என சகலருக்கும் ஏற்புடைய அரசியல் தீர்வு அமைய வேண்டுமானால் அது எப்படியிருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?

ஷோபாசக்தி: பிரச்சினை என்று இருந்தால் அதற்கு கண்டிப்பாக எங்கேயோ ஒரு தீர்வும் ஏற்கெனவே இருக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. இப்போது முன்மொழியப்படும் தீர்வுகள் குறித்தும், சம்மந்தப்பட்ட தரப்புகள் கூடிப் பேசித்தான், சமரசங்களும் விட்டுக்கொடுப்புகளும் மூலம்தான் அமைதிக்கான பாதையில் அடியெடுத்து வைக்க முடியும். அதன் மூலம்தான் ஒரு சாத்தியமான தீர்வை வடிவமைக்க முடியும். ஆனால், இன்றைய ராஜபக்சே அரசு தீர்வு குறித்துப் பேசவே மறுக்கிறது. தீர்வுக்குப் புலிகள் சம்மதிக்கவில்லை என்று இவ்வளவு காலமாக இருந்த அரசுகள் சொல்லிவந்தன. அதில் உண்மையும் இல்லாமலில்லை. ஆனால், இப்போது ஒரு தீர்வை முன்வைப்பதில் அரசுக்கு என்ன தடையிருக்கிறது? ஆனால், ராஜபக்சே அடுத்த ஜனாதிபதி தேர்தலிற்குப் பின்புதான் தீர்வு குறித்தெல்லாம் பேச முடியும் என்கிறார். இந்த பொம்மை மகாணசபை ஏற்பாட்டுடனேயே திருப்தியடைய தமிழர்கள் நிர்பந்திக்கப்படுவது மட்டும்தான் இனி நடக்கயிருக்கிறது.

இலங்கையில் இன அடையாளங்களுடன் அரசியல் கட்சிகள் இயங்குவதைத் தடை செய்யும் சட்டமொன்றைக் கொண்டுவர இலங்கை அரசு அண்மையில் முயன்றது. நீதிமன்றம் அந்த முயற்சிக்கு இப்போது தடைபோட்டிருக்கிறது. எனினும், அரசு சிறுபான்மை இனங்களின் அரசியலுக்கு முடிவுகட்டி அவற்றின் தனித்துவத்தை நீர்த்துப்போகச் செய்யவே முயற்சிக்கிறது. நாடு முழுவதையும் பேரினவாதக் கட்சிகளே பிரதிநிதித்துவப்படுத்தும் திட்டத்தை நோக்கியே இலங்கை அரசு நகர்கிறது. ராஜபக்சேவுடன் கூட்டுச் சேர்ந்த கட்சிகள்தான் கிழக்கில் மகாண சபையையும் யாழ் நகரசபையையும் கைப்பற்றியிருக்கின்றன.

இப்போதைக்குத் தீர்வென்றெல்லாம் ஏதுமில்லை. அதை ஏதாவது ஒரு தரப்பு மட்டும் முடிவுசெய்துவிட முடியாது. ஒரு தீர்வுத் திட்டத்திற்கு வருமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய அரசியல் சக்திகள் இப்போது தமிழர்களிடம் கிடையாது.

மீனா: புலிகள் அவ்வாறான சக்திகளாக முன்பு இருந்தார்களல்லவா?

ஷோபாசக்தி: நிச்சயமாக இருந்தார்கள். ஆனால், பல்லாயிரம் உயிர்களைப் பலிகொடுத்து அதன்மேல் கட்டப்பட்ட அந்தச் சக்தியைப் புலிகள் தவறாக விரயம் செய்தார்கள். அவர்களின் இராணுவவாத அரசியலும் சர்வதேசச் அரசியல் சூழல்களைப் புரிந்துகொள்ள அவர்கள் மறுத்ததும்தான், இறுதி நேரத்தில் புலிகள் யுத்த நிறுத்தத்திற்குத் தயார் என்று அறிவித்தபோது கோத்தபாய ராஜபக்சே இது நல்ல நகைச்சுவை என்று கேலி பேசி அந்தக் கோரிக்கையை நிராகரிக்குமளவிற்குப் புலிகளைக் கொண்டுவந்து நிறுத்தியது; இறுதியில் அவர்களை அழித்தும் போட்டது.

புலிகள் வழியிலான அரசியல் வெறும் தோல்வி அரசியல் மட்டுமல்ல; தார்மீகம் அற்ற அரசியலும் என்பதைக் காலம் நிரூபித்துள்ளது. வெறுமனே தமிழ்த் தேசிய உணர்வில் நின்று பேசாமல், இன்றைய சர்வதேச அரசியல் சூழல்களையும் இலங்கைக்கும் அந்நிய வல்லாதிக்கவாதிகளுக்குமான தொடர்பையும், அதில் இருக்கும் பொருளியல் காரணிகளையும் விளங்கிக்கொள்ள முடிந்தவர்களால் மட்டுமே இனித் தமிழர்களிற்குச் சரியான அரசியல் தலைமையை வழங்க முடியும். அரச பயங்கரவாதத்திற்கு எதிரான, விட்டுக்கொடுக்காத எதிர்ப்புணர்வும் சனநாயக அரசியல் நெறிகளின் மீது நம்பிக்கையும் கொண்ட ஒரு அரசியல் போக்கு வெற்றிடத்திலிருந்து உருவாக வேண்டியிருக்கிறது

மீனா: 'வடக்கின் வசந்தம்' தமிழரின் வாழ்வில் வீசுமா?

ஷோபாசக்தி: அரசியல் தீர்வினை வழங்கி ராணுவத்தை மீளப்பெற்றுக்கொள்வதன் மூலம் தான் வசந்தம் வருமே தவிர, இலங்கை அரச படைகளை தமிழர்களின் குடியிருப்புகளில் செருகிக்கொண்டு போவதன் மூலம் வராது. மாகாண சபை போன்ற அற்ப சொற்ப சலுகைகளுடன் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளை முடக்குவதற்கான கவர்ச்சி கண்துடைப்பே இந்த 'வடக்கின் வசந்தம்'.

மீனா: 'வசந்தம்' இல்லையென்றாலும், போர்ப் பீதிகளற்ற வாழ்வாவது சாத்தியமென்றால் உங்கள் கிராமத்திற்குத் திரும்புவீர்களா?

ஷோபாசக்தி: இரண்டு அல்லது மூன்று வருடங்களில் திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் தான் எனது கிராமத்திலிருந்து கிளம்பினேன். இருபது வருடங்களாகிவிட்டன. அய்ரோப்பாவில் அகதி வாழ்க்கை மிகவும் கசப்பான வாழ்க்கை என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். எனது கிராமத்தின் மீது எனக்குப் பெரிய பற்றிருக்கிறது என்பதுமில்லை. ஆனால், ஈழப் போராட்டத்தில் பங்கெடுத்தவன் என்ற முறையிலும் ஒரு இடதுசாரி என்ற வகையிலும் எனது எழுத்தும் அரசியலும் வாழ்வும் முற்று முழுதாக ஈழத்துடன்தான் பிணைந்திருக்கிறது. ஊருக்குப் போக வேண்டும்; அதற்கான சூழலும் தருணமும் விரைவில் எனக்குக் கிட்டவேண்டுமென்று என்னை வாழ்த்துங்கள் மீனா!

மீனா: நிச்சயமாக ஷோபா! உங்களுக்கும் உங்களைப் போலவே காத்துக்கொண்டிருக்கும் அத்தனை ஈழத் தமிழர்களுக்கும் அத்தருணம் விரைவில் கிடைக்க எனது உளமார்ந்த வாழ்த்துகள்!

'அம்ருதா' (நவம்பர் 2009) இதழில் வெளியாகிய நேர்காணல்

Monday, 16 November 2009

பசுவோடு சேர்ந்த பன்றியும் புல் தின்னும்!

- rjh. [P.

Jk;igg;gpbj;J NkNy tur;nrhy;tJ kpfkpf Rygk;. ,g;gbr; nrhy;gth;fs; Mapuf;fzf;fpy; NkNy ,Uf;fpwhh;fs;. Mdhy; mjs ghjhsj;jpy; ,yl;rf;fzf;fpy;> Nfhbf;fzf;fpy; kf;fs;> Neh;ikahd murpayhsh;fs; ,Uf;fpwhh;fs;.

,d;iwa Njjpapy; nfhs;ifAk; mjw;fhf tho;Tk; ve;jsT J}uk; gadspf;fpwJ my;yJ gaidj;jUk; vd;gnjy;yhk; Nfs;tpfNs! mbj;jhy; kWfd;dj;ijAk; fhl;L vd;W nrhd;dJ md;iwa fhyk;. Mdhy; ,d;Nwh mbj;jhy; mbj;jtidf; nfhd;WtpL vd;W nraw;gLgtid jiyapy; itj;Jf;nfhd;whLfpw Afk;.

vg;gb fy;Njhd;whf;fhyj;J Kd;Njhd;wpa %j;j Fuq;F jkpo; Fuq;F MdhNjh mNjNghyj;jhd; Nkw;Fwpg;gpl;l ajhh;j;jj;ijAk; Kjd; Kjy; ,e;j gpugQ;rj;jpy; epiyehl;bath;fSk; jkpoh;fNs!

Vl;Lr;Ruf;fha; fwpf;FjthJ vd;gJ ve;jsJ}uk; cz;ikNah me;jsT J}uj;Jf;F rw;Wf; FiwthdJjhd; nfhs;iffSk; Nfhl;ghLfSk;. Ajhh;jk; gw;wp gpjw;Wgth;fs; ,e;j ajhh;j;jj;ijg; gw;wp fpQ;rpj;Jk; rpe;jpg;gjpy;iy.

Vnddpy; kdpjFyk; tsh;r;rpaile;JtUk; fhyj;jpy; nfhs;iffs; Nfhl;ghLfs; Kd;itj;jth;fs; mjd;gb tho;e;Jfhl;bath;fs; tuyhw;wpy; ,lk;gpbj;jhh;fs;. rhjpj;Jfhl;bdhh;fs;. mt;thwhd xd;iwr; rhjpg;gjw;F kf;fs; tpisepyk; ed;whfNt ,Ue;jJ. Mdhy; ,d;Nwh?

Gypfs; tpijj;j jkpo; ghrprj;jpypUe;J rpq;fps; FbkfDk; tpLgltpy;iy. mjw;F jPdp NghLtjhfNt r%fj;Jld; gf;fr;rhh;gw;w Kiwapy; njhlh;Gglf;$ba xNu xU rhjdkhfpa 'ClfJiw'Ak; nraw;gl;LtUfpwJ. ,e;j Clfj;Jiwia Kwpabf;ff;$ba njd;Gk; njspTk; vjph;gf;fj;jpy; ,Uf;fpwjh? mg;gb ,Ue;jhYk; gpur;rhuk;> fl;rp murpay; vd;w Kj;jpiuNa Mzpj;jukhf Fj;jg;gLk;.

nfhs;if> rpj;jhe;j hPjpapy; cah;e;j epiyf;F te;jth;fs; tho;tpd; epiyahd ,lj;ijg; gpbj;Jf;nfhz;lth;fs; Nghjpg;gJ Rygk;. kpfkpfr; Rygk;. md;whlk; fhl;rpahf caph;tho;jYf;F Nghuhb kdk;ntJk;gp Gz;zhfpath;fs; VjhtJ xU JUk;igahtJ gpbj;J jg;gpj;Jf;nfhs;sNtz;Lk; vd;W epidg;gJ jtW vd;W nrhy;tjw;fhd jhh;kPfj;ij ehk; ,of;fhky; ,Uf;fpNwhkh?

xU Foe;ij VjhtJ xd;iw fPNo nfhl;btpl;lhy; mJ cz;zf;$baJ vd;why; vLj;J thapy;Nghlj;jhd; epidf;Fk;. my;yJ fhyhNyh ifahNyh kpjpj;J mioe;J ,d;Gwj;jhd; nra;Ak;. Foe;ijapd; ,d;gk;jhd; gpujhd ghLnghUs;. mijtpLj;J Foe;ijia jz;bg;gNjh Foe;ijapd; mwpT mt;tsTjhd; vd;wpfo;tjpNyh gad;ghby;iy. Foe;ijia jz;bg;gJk;> Nehfbj;jJk;jhd; gad;ghlhftpUf;Fk;.

Friday, 30 October 2009

வாறான் வாறான் பூச்சாண்டி மாட்டு வண்டியிலே...

-    rjh. [P.

<otpLjiyg; Nghuhl;lk; ,isa jiyKiwapduhy; Muk;gpf;fg;gl;lNghJ ,isQh;fSk; AtjpfSk; mh;g;gzpg;NghL ,af;fj;ij fl;baikg;gjpYk; kf;fis murpay;kag;gLj;JtjpYk; mauhJ ghLgl;lhh;fs;. mth;fs; mstplKbahj jpahfq;fis nra;jhh;fs;. %d;w Ntis rhg;gpl Kbahj epiyapYk; jhk; nfhz;l ,yl;rpaj;Jf;fhf tPWld; vOe;jdh;. mth;fs; kl;Lky;y rhjhuz nghJ kf;fs; gyUk; ,th;fspd; jpahfj;ij kjpj;J NjhNohL Njhs; epd;whh;fs;.

,yq;if ,uhZtj;jpd; gpbapy; gy ,isQh;fs; Atjpfs; mfg;gl;L nrhy;nyhdh Jd;gq;fis mDgtpj;jhh;fs;. jkJ ,dpikahd ,isikf;fhyj;ij rpiwf;fk;gpf;Fg; gpd;dhy; vz;zpf;nfhz;bUe;jhh;fs;. gyh; jkJ caph;fisNa jpahfk; nra;jhh;fs;.

Mdhy; xUrpyh; ,e;j fhyfl;lj;jpy; 'guhf;Ff;fhl;b' (divert) jk;ikg; ghJfhj;Jf;nfhz;lJld; tskhfTk; eykhfTk; tsh;e;Jnfhz;lhh;fs;. ,th;fs; ,d;W jkpo; [duQ;rf murpay; gpuKfhh;fs;. ,th;fs; khf;rpak; nydpdprk; fw;W kf;fis tpLjiyapd;ghy; <h;f;f Kw;gl;lth;fshk;!

,th;fs; tapW tsh;f;f ghtg;gl;l jkpo; kf;fspd; chpikjhd; fskhff; fpilj;jpUf;fpwJ. cz;ikapNyNa tapWjhd; tsh;f;fpwhh;fs;. ghid rl;biag; ghh;j;J "eP fWg;G" vd;wJNghy Gypfspd; jiyth; gpughfud; "vd;d tPq;fpf;nfhz;L Nghwh?" vd;W $j;jikg;G cUthf;fj;jpd; gpd;dh; re;jpj;jNghJ Nfl;lhh;. 'kz;il'apy; ciwf;ftpy;iy mtUf;F> Vnddpy; mtUf;F ghuhSkd;w fjpiuNtz;LNk.

,g;gbahdth;fs; ,d;W jkpo; kf;fspd; epiyikfisAk; kw;w murpay; fl;rpfspd; epiyikfisAk; gw;wp fijasf;fpwhh;fs;. jkpo; czh;Tfis cRg;Ngj;jp thf;Ff; Nfl;fkl;LNk ,th;fSf;Fj; njhpe;j xd;W. jkpo; kf;fSf;F vd;d Nrit nra;jhh;fs; vd;Nwh Fiwe;jgl;rk; fk;khapy J}h; thhpdNjh ,th;fsJ rhpj;jpuj;jpy; ,y;iy.

,q;F GypfisNah my;yJ Gypfisg;Nghd;w mikg;igg; gw;wpNah Fwpg;gpltpy;iy. kf;fs; ,af;fj;ij fl;bnaOg;Gtjpy; ghLgl;l gy Neh;ikahd Njhoh;fs;> gyiuAk; jkJ ,af;fj;jpy; ,izj;Jf;nfhz;lhh;fs;. GypfspdJ Nfhuj;jhz;ltj;jhYk; murgilfspd; nfh^ukhd nfhiyfspdhYk; gy Njhoh;fspd; caph;fs; gwpf;fg;gl;lJ. ,e;j mepahakhd caphpog;Gf;fNs jiyikjhq;fpa rpy Njhoh;fis ,d;Wtiu miyf;fopj;Jf;nfhz;bUf;fpwJ.

Mdhy; ,njy;yhk; ,y;yhky; ,d;W [duQ;rf jkpo; murpaypy; ,dthjk; Ngrpf;nfhz;L nrhj;ijAk; ngUf;fpf;nfhz;L njhe;jpiaAk; tsh;j;Jf;nfhz;L murpay; cgNjrpf;fpwhh;fs;.

tutpUf;Fk; ghuhSkd;wj; Njh;jypy; jkpo; kf;fs; ,th;fSf;F jFe;j ghlk; Gfl;lNtz;Lk;. Mdhy; ,yFtpy; czh;r;rpfSf;F mbikg;gLk; kdpj kdq;fis ,th;fs; jk;trg;gLj;Jtjpy; ntw;wpfhz;ghh;fs; vd;gNj fle;j khefurigj; Njh;jy; KbTfs; fhl;bd. ,th;fs; jkpoh;fspd; czh;rpfisr; nrhwpe;Jtpl;L Rfk; fhz;ghh;fs; vd;gjpy; ve;jtpj re;NjfKk; nfhs;sj; Njitapy;iy. jkpoh;fspd; chpik> jkpo; Njrpak;> jd;dhl;rp> mjpfhuk; ,d;dgpw ntw;Wg;gjq;fis mLf;fpf;nfhz;Nl Nghthh;fs;. thf;Fg;gpr;ir Nfl;L xt;nthU jkpoh; tPl;Lf;fjTfisAk; jl;lj;jhd; Nghfpwhh;fs;.

mNjNghy jkpo; Clfq;fs; vd;W nrhy;ypf;nfhs;gitAk; jkpoh;fspd; czh;r;rpfis fpswptpLtjpy; jk;khyhd gq;fpid tfpf;Fk; vd;gJ fle;Jte;j fhyq;fspy; ep&gzkhapUf;fpwJ. Nkw;Fwpg;gpl;l tifawhf;fs; jkpo; kf;fspd; czh;r;rpfis nrhwpe;JtpLtjw;F ,e;j ,uz;lhk;ju jkpo; Clfq;fs; jPdpNghLtJ Nghy czh;r;rpfis fpswptpl;Lf;nfhz;Nljhd; ,Uf;Fk;. ,e;jkhjphpahdth;fspd; ntw;W Ntl;Lf;Fk; ntWk;tha; nrhjg;gYf;Fk; ,e;j jkpo; Clfq;fs; Kd;Dhpik nfhLf;Fk; vd;gjpy; re;Njfkpy;iy. ,th;fspd; thj;jpd; gpujhdkhf xypg;gJ 'jkpoh;fspd; chpikia jhiuthh;j;Jtpl KbahJ'
'jkpoh;fis jkpoh;fNs MoNtz;Lk;' vd;gNj.

,e;jkhjphpahd Nfh\q;fs;> ,e;j tifawhf;fspd; murpaYf;F murpaYkhfpwJ. Mlk;gur; nryTf;F fhRkhfpwJ. ,th;fspd; murpay; tho;Kiwia mtjhdpj;jhy; ed;F GhpAk;. ehlhSkd;w cWg;gpduhtNj ,th;fspd; xNu ,yl;rpak;. mjdhy; tUk; rk;gsk; - fpk;gsk;> Nfhl;lh fPl;lh vd;W rfyijAk; mjhtJ Ngid> ngd;rpy;> mopwg;gh; vd;W midj;ijAk; ngw;Wf;nfhz;L jhKk; jk;ikr; Rw;wpapUg;gth;fisAk; tsg;gLj;jpf;nfhz;L> 'jkpoh;fspd; chpika jhiuthh;j;Jtpl KbahJ' vd;ghh;fs;.

',uhkd; Mz;lhnyd;d ,uhtzd; Mz;lhnyd;d' vd giwrhw;wpa jkpo;$Wk; ey;Yyif 'jkpoh;fis jkpoh;fNs MoNtz;Lk;' vd;W cRg;Ngj;Jtjpy; jkpo; ,dthjpfs; ntw;wpfz;Ls;shh;fs;. Kw;Nghf;F rpe;jidapd; tsh;r;rp> Kw;Nghf;F ,yf;fpaj;jpd; tsh;r;rp> Kw;Nghf;F nraw;ghl;lhsh;fspd; nraw;ghL> ,lJrhhpfspd; murpay; jiyikj;Jtk; ,J vJTkpd;wpapUe;jhy; Nkw;Fwpg;gpl;l cRg;Ngj;jy; eilngw;Wf;nfhz;Ljhd; ,Uf;Fk;. jkpoh;fSk; cLf;Ff;F MlNtz;baJjhd;.

,d;iwa Afj;jpy; fpuhkq;fs; efuq;fs; Mfpd;wd. jkpo; ,dthj murpay;thjpfspd; ,Ug;Gk; efiu mz;baNj. gps;isfSk; Ngug;gps;isfSk; efuj;jpNyNa Ntiyghh;f;fpwhh;fs;. gbf;fpwhh;fs;. ntspehLfSf;F gwe;JtpLfpwhh;fs;. xd;Wkpy;yhjtd; jkpioAk; kz;izAk; fl;bf;fhf;f Ntz;Lk;! mjw;Fj;jhd; 'jkpoh;fspd; chpika jhiuthh;j;Jtpl KbahJ'
'jkpoh;fis jkpoh;fNs MoNtz;Lk;' vd;w ke;jpuq;fs;.

,jw;Fs; jkpoh; gpuNjrq;fspy; rpq;fs FbNaw;wk; vd;Wk; jkpoh; gpuNjrq;fspy; rpq;fs kjj;ij gug;Gtjw;fhf Gj;j tpfhiu fl;LtjhfTk; Vfg;gl;l Fw;wr;rhl;Lfs;. ,e;j nkj;j khf;rpak; gbj;j ntq;fhaj;Jf;Fj; njhpatpy;iyah? Gj;jk; xU kjk; ,y;iy vd;W? mijtpl;LtpLNthk; Gj;jk; rpq;fsth;fspd; kjkhk;? vd;d nfhLik. Vd; rpq;fsth;fspy; fpwp];jth;fs; ,y;iyah? my;yJ NtWkjj;jth;fs;jhd; ,y;iyah? NkYk; Gj;j kjj;ijj; jOtpahh;fs; cynfq;Fk; gue;Jtho;fpwhh;fs; vd;gij mwpahj Kl;lhs;jdkh?

jkpoh; gpuNjrq;fspy; rpq;fsf; FbNaw;wk; vd;W $g;ghL NghLtjhy; xd;Wk; Mfptplg;Nghtjpy;iy. ty;ytd; tFj;jNj rl;lk;> ePjp> jh;kk; vy;yhk;. 90fspy; 2 kzpj;jpahs mtfhrj;jpy; cLj;j cilAld; tlf;fpypUe;j K];yPk;fs; tpul;babf;fg;gl;lJNghy ,J xd;Wk; NkhrkhdJ my;y. NkYk; jkpoh; gpuNjrj;ij fl;baOtjhy; ,dpAk; vijahtJ rhjpj;Jtplyhnkd;W kdg;ghy; Fbf;fpwth;fs; rpfpr;irngWtJ ey;yJ.

eilngwTs;s [dhjpgjpj; Njh;jypy; Gypfs; Kd;dh; vLj;j KbitNa ,th;fSk; vLg;ghh;fs;. Vnddpy; jw;Nghija [dhjpgjp kfpe;j uh[gf;\Tf;F thf;fspf;Fk;gb Nfhu jd;khdk; ,lk;nfhLf;fhJ. gjpYf;F vjph;fl;rpfshy; nghJ Ntl;ghsuhf n[duy; ngd;Nrfh epd;why; mJ ,d;Dk; Nkhrkhf ,Uf;Fk;. ,J gUe;ij tpl;L fOifg; gpbj;j fijahfptpLk; ,th;fSf;F.

,e;j jphprq;F nrhh;fj;Jf;F Nghfpwtop ,th;fSf;F ,yFthfj; njhpahJ. vdNt Njh;jiyg; gfp];fhpf;f Ntz;Lk; vd;w cd;djkhd Kbit vLg;ghh;fs;. mjhtJ ghuhSkd;wj; Njh;jypy; jkf;F thf;fspf;Fk;gbAk; [dhjpgjpj; Njh;jiy gfp\;fhpf;Fk;gbAk; tuyhw;W Kf;fpaj;Jtk; tha;e;j Kbit vLg;ghh;fs;. ,J Gyp jd; jiyapy; kz;iz ms;spg;Nghl;lJNghyj;jhd;.

Wednesday, 28 October 2009

புலிகளின் அரசியல் முகமூடி தமிழ் தேசிய கூட்டமைப்பு!

-KFe;jd;.

tpag;ghd gy tplaq;fis cs;slf;fp ,d;iwa etPd Afj;jpYk; jkpoh;fis ntWk; czh;rpa+l;b NkYk; NkYk; mbikahf;f Gyp jiyth; gpughfudhy; gyhf;fhukhf cUthf;fg;gl;l rpy fl;rpfspd; ,izg;Ng jkpo; Njrpaf; $l;likg;G. ,f;$j;jikg;G ,d;Wk; kpff;FWfpa Nehf;fq;fisAk; nfhs;is murpay; ,yhgkilaTk; jkpohpd; mgpyhirfNshL tpisahbf;nfhz;bUf;fpwJ. ,jpy; tpag;ngd;dntdpy; ,f;$j;jikg;gpy; mq;fk;tfpf;Fk; fl;rpfspd; KJnfYk;ig fle;jfhyj;jpy; Gypfs; cilj;njwpe;jJjhd;.

gok;ngUk; fl;rpahfTk; kf;fs; kj;jpapy; gpugykhdJkhd jkpoh; tpLjiyf; $l;lzp> gpujhd tpLjiyg;Nghuhl;l ,af;fq;fshd nuNyh> <.gp.Mh;.vy;.vt; kw;Wk; jkpo; fhq;fpu]; vd;gd ,jpy; mq;fk; tfpf;fpd;wd. ,e;j fl;rpfspd; ,af;fq;fspd; jiyikfs; Gypfspdhy; eatQ;rfkhf mopf;fg;gl;ld. ,Ug;gpDk; murpay; vd;w rhf;filapy; thf;Ffisg; ngw;W gy;NtWgl;l RfNghfq;fis mDgtpf;fTk; Nftyk; GypfsplkpUe;J jq;fspd; caph;fisf; fhj;Jf;nfhs;sTk; Gypfspd; fhybapy; kz;bapl;ldh;.

Mdhy; ,d;Nwh Gypg;gaq;futhjk; Kw;whf Njhw;fbf;fg;gl;Ls;s epiyapy; ,f; $j;jikg;gpd; epiyg;ghL vd;d?

ghrprg; Gypj; jiytuhy; ,f;$l;likg;gpdUf;F cgNjrpf;fg;gl;l jkpo; Njrpak;> jkpo; Njrpa jiyik> Vfgpujpepj;Jtk;> jkpoPok;> MAjg;Nghuhl;lj;jpw;F MjuT jpul;Ljy;> ,dntpg;gpur;rhuk;> epjpNrfhpj;jy; Nghd;wtw;wpd; epiy vd;d?

cz;ikapy; ,f; $j;jikg;gpdh; GypfSf;F gae;J Raj;ij ,oe;J eilgpzkhfNt ,Ue;jdh;. ,dptUk; fhyq;fspy; jkpoh;fis Vkhw;w vd;dtpj;ij fhl;lg;Nghfpwhh;fs; vd;gNj ,d;iwa Nfs;tp.

Gypfspd; mopitaLj;J ,f;$j;jikg;gpd; ghuhSkd;w cWg;gpduhd rptehjd; fpN\hh; gpd;tUkhW $wpa tplak; rw;W ftdj;jpw;nfhs;sjf;fJ. "je;ij nry;tthy; cUthf;fg;gl;l jkpouRf;fl;rp> jkpoh; tpLjiyf; $l;lzp fl;rpfspd; mfpk;ir Nghuhl;lk; ,yq;if jkpoh;fSf;F ve;j tpNkhrdj;ijAk; ngw;Wf;nfhLf;tpy;iy. gpughfudhy; ,Wjptiu nfhz;L nry;yg;gl;l MAjg;Nghuhl;lKk; vjidAk; ngw;Wf;nfhLf;ftpy;iy. khwhf tuyhWfhzhj khngUk; mopTfisNa jkpo; r%fj;jpw;F rkhg;gzk; nra;Js;sJ"

jkpo; fl;rpfspd; mfpk;ir tuyhWk; rpq;fs kf;fSld; Nrh;e;J chpikNahL thOk; topia nrhy;ytpy;iy. gphptpid kw;Wk; ,dthjj;ij Cf;Ftpf;Fk; nraw;ghlhfNt njhlh;e;jd. <w;wpy; ,JNt Jg;ghf;fp fyhrhuj;jpw;F tpj;jpl;lJ. gpughfud; vd;w tp\ tpUl;rj;ij jkpo; r%fj;jpw;F fhzpf;ifahf;fp mt;tp\j;Jf;F fl;Lz;LNghd tuyhNw jkpo; $j;jikg;gpdJk; tuyhW.

mz;ikapy; Gnshl; jiyth; j. rpj;jhj;jd;> jkpo; $j;jikg;G Gypfshy; gyhj;fhukhf cUthf;fg;gl;lJ vd;Wk; Gypj;jiyik mope;j gpd;dh; ,f;$l;lj;jpd; ajhh;j;jkw;w> eilKiw rhj;jpag;glw;w Nfhhpf;iffSk; JNt\ fUj;Jf;fSk; Njitaw;wJ vdTk; Gjpa rpe;jid cUthf fle;jfhyg; gbg;gpidfis itj;J ,f;$j;jikg;G fiyf;fg;gl Ntz;Lk; vdTk; fUj;Jj;njhptpj;jhh;.

,f;fUj;J tuNtw;fg;gl Ntz;banjhd;whFk;. ,jpy; mq;fk; tfpj;j fl;rpfs; Rakhf ,aq;fp jq;fis Ratpkh;rdk; nra;aj;Jzpe;jhy; ey;y gy gads;s fUj;jhf;fq;fSk; gyhgyd;fSk; jkpo; r%fj;jpw;F fpl;Lk; vd;gjpy; Iakpy;iy. Gjpaghij Gjpa rpe;jidNa ,d;iwa Njit. ,y;iyNa jkpopdj;Jf;F kPl;rpapy;iy.

jkpo; ehl;bYk; jpuhtpl rpe;jidia Njhw;Wtpj;j jpuhtpl fofq;fSk; gphptpid Nfhhpf;ifia xJf;fptpl;L kj;jpa $l;lhl;rp khdpyj;jpy; Rahl;rp vd ,ize;J Ntw;Wikapy; xw;Wikiaf; fz;L cr;rsT tsh;r;rp ngw;Ws;s tuyhiw ehk; myl;rpak; nra;JtplKbahJ. mJNt ey;yNjhh; Kd; cjhuzk;.

ey;y re;jh;g;gq;fis ngWtjw;F jdpj;Jtk; gphptpid vd thf;Ff;fhf ,dthjk; NgRtij tpLj;J Ml;rpahsh;fSld; epge;jidAld; Ml;rpapy; gq;Nfw;Fk; tifapy; jkpoh;fspd; gyk; fl;bnaOg;gg;glNtz;Lk;. 1977y; ngwg;gl;l murpay; gyj;ij MAjf;FOf;fis cUthf;fp mopit NjlNt gad;gLj;jpdhh;fs;. vjph;fhyj;jpy; ,g;gbnahU gyj;ij ngw;w murpay; chpikfisAk; nghUshjhu rgPl;rj;ijAk; tlfpof;F ngw$batifapy; Gjpa rpe;jid> Gjpa jiyikNa ,d;iwa NjitahFk;.

ve;jnthU ,dj;ijAk; gaKWj;jp gzpaitj;J fhhpak; rhjpf;fKbAk; vd;gJ mwptPdk;. ,e;j Kl;lhs;jdkhdijj;jhd; Gypfs; filrptiu ifahz;lhh;fs;. gpughfudJ rz;bj;jdj;jpw;Fk; nfhiy ntwp mr;RWj;jYf;Fk; mbgzpe;J jdpehl;ilNah my;yJ Xuq;Fy epyj;ijNah toq;Fk; mstpw;F ve;j ehl;bd; Ml;rpahsDk; Kl;lhshf ,Uf;fg;Nghtjpy;iy.

,yq;ifj; jkpoh;fSf;F rkj;Jt chpikfs; ,y;iy vd;gJ cz;ikNa. fpilj;j re;jhg;gq;fsidj;Jk; gpughfudpd; Kl;lhs;jdj;jhy; ehrkhf;fg;gl;ld. Vw;fdNt jkpoUf;F ,Ue;j eyd;fSk; rpijf;fg;gl;ld. ,ize;j tlf;F fpof;Fk; gphpf;fg;gl;lJ. ,J ey;y vLj;Jf;fhl;L.

gpuNjr NtWghLfisAk; jkpo; ,dthjj;ijAk; Gypfs; jhuskhfNt tpijj;jdh;. jPh;T vd;W te;jNghJk;$l mjw;F jPh;Tfhd Kbahjgb aho; Nkyhjpf;f rpe;jid toptFj;jJ. midj;J murpay; topKiwfisAk; td;KiwahYk; nfhiyfshYk; milj;Jitj;jpUe;j gpughfudpd; ,wg;gpd; gpd;duhtJ Gjpa murpay; ntw;wplj;ij epug;Gk; toptiffis fhz midtUk; ciof;f Ntz;baJ fhyj;jpd; fl;lhak;.

NkYk; GypfSf;F gae;j Clfj;JiwapdUk; gzj;Jf;fhf jhh;kPfj;ij jhiuthh;j;j vOj;jhsh;fSk; r%fj;jpd; eyd; fUjp tpopj;Jf;nfhs;s Ntz;Lk;. ,dpNky; mr;rkpd;wp rpe;jidfis tpopg;Gzh;Tfis Clfj;Jiwapdh; Nkw;nfhs;tJ mtrpakdjhFk;. ,e;jpahtpy; XusTf;F Clfq;fs; mr;rkpd;wp ,aq;Ffpd;wd. fle;j fhyq;fspy; jkpo; Clfq;fs; Gypfspd; ,Uk;Gg; gpbapype;jit.

jkpoh;fis ee;jpflypy; gpughfuDld; Nrh;j;Jj; js;spath;fspy; Kf;fpakhdth;fs; ,e;j Clfj;JiwapdNu. ,e;jpaf; NfhkhspfSk; Gyd; ngah; FQ;RfSk; ehLfle;J jkpoPok; mikf;ftpUg;gh;fSk; ,d;Dk; jkpoh;fis Vkhw;wp gpiog;Gelj;jNt Jbf;fpd;wdh;.

Gypfspd; xt;thj fUj;Jf;fisAk; mth;fspd; murpay; Kf%bahfpa jkpo; Njrpa $j;jikg;gpdh;fisAk; rPh;jpUj;j cz;ikahd gj;jphpifahsh;fNs Neh;ikAld; Kd;tuNtz;Lk;. jkpo; r%fj;jpw;fhd rkchpik Nghuhl;lk; xa;e;JNghfKbahJ. cz;ik topapy; mwpT hPjpahd rpe;jidfSld; nraw;ghNl mtrpakhdJ.

Saturday, 17 October 2009

மாலை அணிவிக்கப்படும் – குழப்பமடையவேண்டாம்!

-rjh. [P

Gypfspd; jiyth; NtYg;gps;is gpughfudpd; khtPuh;jpd ciu ,k;Kiw eilngwhJ vd;w NghJk; gpughfuDf;fhd mf(Gw) tzf;fj;ij nrYj;Jtjw;F ntspehl;L Gypg;gpdhkpfs; jahuhfp tUfpd;whh;fs;. ,jd; Kd;Ndhl;lkhf jkJ Nky;kl;l MjuT jsj;jpy;> ',k;Kiw gpughfuDf;F khiy mZtpf;fg;NghfpNwhk; ahUk; Fog;gkilaNtz;lhk;' vdf; Nfhug;gl;Ls;sdh;.

fWg;G 'Nrl;' Nghl;ltndy;yhk; je;ij nghpahuhfptpl KbAk; vd;W ,e;jpahtpy; kdg;ghy; Fbf;Fk; $l;lk; ,e;jj; jftiyaLj;J ngUk; Fog;gkile;Js;sJ. ,jd; ntspg;ghlhfj;jhd;> mDkhd; "fz;Nld; rPijia" vd;W ,uhkDf;F ciuj;jJNghy rPkhd; "fz;Nld; gpughfuid" vd;W fijtpLfpwhh;. nts;is cilazpe;j fWg;Gs;sk; nfhz;l ghjphp n[fj; n[];ghUk; jd; gq;Ff;F 'ehd; fpspnehr;rp Nehf;fp tUNtd;' vd gpughfuNd $wpajhf jdJ ,izaj;jsj;jpy; wPy; tpl;Lk; Gyp Clfq;fNs fz;Lnfhs;stpy;iy.

jkpoh; Nghuhl;lk; vd;W mepahakhf ,isQh;fs;> Atjpfs;> rpWth; - rpWkpaiug; gypnfhLj;Jtpl;L mth;fspd; ngauhy; khtPuh; ciu. mJTk; jdJ gpwe;j ehSf;Fk; khtPuh;fspd; ,we;j ehSf;Fk; ghyk; mikj;J gpughfudpd; ciu.

,e;jf; nfhLik Nghjhnjd;W me;j gpjl;lYf;F fdlh Nrudpy; ,Ue;J nfhOk;G fh. rptj;jk;gp tiu nghopg;G vOJthh;fs;. jw;Fwp jkpo; Clfq;fs; njhlf;fk; jwpnfl;l Clftpayhsh;fs; tiu xNu Gyk;gy;jhd;.

,k;KiwAld; mJ elf;fhJ. mjw;Fg; gjpyhf gpughfuDf;F khiy mzptpf;fg;gLk;. khiy mzptpj;jJ gpio - rhp vd;w thjk; voyhk;. my;yJ khiy mzptpg;gjw;F ahh; ahUf;F jFjp ,Uf;F vd;W tpthjk; voyhk;. ,t;thW r%fj;Jf;Fk; mwptpaYf;Fk; cjtf;$ba tpthjj;ij jkpo;$Wk; ey;YyF fhZk;. ,t;thwhd xU tuyhw;W Kf;fpaj;Jtk; tha;e;j fhyfl;lj;jpy; ehKk; tho;e;Njhk; vd;gJ vkf;nfy;yhk; ngUikjhNd!

,jpy; Ntbf;ifnad;dntd;why;> jkpoPok; Ntz;bg; Nghuhba kz;zpy; gpughfudpd; glj;Jf;F ahh; khiyNghLtJ? ml gpughfudpd; glj;ijahtJ ahuhtJ itg;ghh;fsh? ahuhtJ itj;jpUg;ghh;fsh? vy;yhk; Gyd; ngah;e;Js;s nfhOg;ngLj;j jkpopdthsh;fspd; iffspy;jhd; ,Uf;fpwJ. mth;fs;jhd; gpughfuDf;F jiyg;ghifAk; fl;bdhh;fs; ,g;Ngh khiyAk; mzptpf;fg;Nghfpwhh;fs;.

Monday, 28 September 2009

தோற்றதுதான் சரித்திரம் வெற்றிகளெல்லாம் வெறும் சம்பவங்களே

- எஸ். மனோரஞ்சன்

"இன்று எம் முன்னே பல கேள்விகள் உண்டு. பிரபாகரனால் தன்னைக் காப்பாற்ற முடியாமல் போனது எப்படி? அவரால் மக்களைக் காப்பாற்ற முடியாமல் போனது எவ்வாறு? அவருடைய போராட்டத்தை அவரால் இறுதியில் இந்த நிலைக்குக் கொண்டுபோக வேண்டி வந்த காரணம் என்ன? இதுபோல ஏராளம் உண்டு. இவற்றுக்கான பதில்கள் பிரபாகரனின் கடந்தகால செயற்பாடுகளிலும் அவருடைய மனவுலகத்திலுமே இருந்தன. இருக்கின்றன.
 
மக்கள் சட்டியில் இருந்து அடுப்புக்குள்ளே இடம் மாற்றப் பட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். எல்லாவற்றையும் தானே எடுத்து தானே போட்டுடைத்த மனிதராக வரலாற்றில் மாறிவிட்டார் அவர். பிரபாகரனே சொல்வதைப் போல "வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம்" என்ற மாதிரியே இந்த நிகழ்ச்சிகளும் அமைந்துவிட்டன."
 
என்றுதான் முடிகிறது அந்த நீண்ட கட்டுரை. இது ஒரு மாதத்திற்கு முன்னர் இந்தியாவிலிருந்து வெளிவரும் காலச்சுவடு சஞ்சிகையில் பிரசுரமாகியிருந்தது. வன்னிக்குள் வாழ்ந்து புலிகளுடன் நேரடி பரிட்சயம் உள்ள ஒருவர் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தை தான் நேரடியாக கண்ட சாட்சியமாக, 'வன்னியில் நடந்தது என்ன? களத்திலிருந்து ஓர் அனுபவப் பகிர்வு' என்ற தலைப்பில் எழுதி பிரசுரித்திருந்தார். பாதுகாப்புக் காரணங்கள் கருதி எழுதியவரின் பெயர் பிரசுரிக்கப்படவில்லையாம் என காலச்சுவடு எழுதியிருந்தது.
 
வசதி கிடைத்தால் இந்தக் கட்டுரையை எல்லோரும் வாசித்தல் வேண்டும் என்பது எனது விருப்பம். தேனி இணையத்தளத்தில் இதனை இப்பொழுதும் வாசிக்கலாம். இந்தக் கட்டுரையின் முடிவில் கூறப்பட்டிருந்த இரண்டு விடயங்களையே இங்கு நான் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளுகிறேன்.
 
ஒன்று, கடைசி நேரத்தில் எவரும் நினையாப் பிரகாரமாக, பிரபாகரனால் ஏன் தன்னையும் மக்களையும் பாதுகாக்க முடியாமல் போனது என்பதற்கான பதில்கள் 'பிரபாகரனின் கடந்தகால செயற்பாடுகளிலும் அவருடைய மனவுலகத்திலுமே இருந்தன' எனச் சொல்லப்பட்டிருப்பது. இரண்டாவது, 'பிரபாகரனே சொல்வதைப் போல "வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம்" ' என கூறப்பட்டிருக்கும் விடயங்களாகும்.
 
இதில் முதலாவது விடயமான பிரபாகரனது கடந்தகாலச் செயற்பாடுகள் ஏன் அப்படி இருந்தன? அவர் ஏன் அப்படியெல்லாம் நடந்து கொண்டார் என்பதற்கான பதில்கள் அவரது மனவுலகத்தில் மட்டும் இருந்தன என்று கூறி நாம் தப்பிக்கொள்ள முடியுமா?  பிரபாகரன் எல்லாவற்றையும் தன்னிச்சையாக செய்தார் மற்றெல்லாரும் வெறும் தலையாட்டிகள்தான் என்று சிந்திப்பதைப்போல் மடமைத்தனம் வேறெதுவும் இல்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. பிரபாகரனின் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் அவரது ஒட்டுமொத்த செயற்பாட்டிற்கும் அவரும் அவரது தளபதிகளும் மட்டுமல்ல, தமிழ் சமூகம் எந்தளவு பொறுப்புச் சொல்ல வேண்டும் என்பதும் இங்கு நிட்சயமாக கேட்கப்படல் வேண்டும்.
 
பிரபாகரனின் கட்டளையில் மேற்கொள்ளப்பட்ட தனிநபர் கொலைகள் மற்றும் கைதுகள், தடுத்து வைத்தல், சித்திரவதை முகாம்கள் மற்றும் சில தனிப்பட்ட வக்கிர செயற்பாடுகள் என்பன ஏன் செய்யப்பட்டன என்பதற்கான பதில்கள் வேண்டுமானால் பிரபாகரனது மனவுலகத்தில் இருக்கலாம். ஆனால் புலிகளின் அபரிமிதமான வளர்ச்சி, பிரபாகரன் எடுத்த அரசியல் முடிவுகள், 30 வருடகால அவரது ஒட்டுமொத்த அரசியல் நகர்வுகள், பிற்போக்குத்தனமான சக்திகளுடன் புலிகளின் கூட்டுச் சேர்க்கை, இந்திய எதிர்ப்பு, தமிழ் சமூகத்தில் ஏனைய முற்போக்கு சக்திகளையும் அதன் தலைமைகளையும் அழித்தமை என்பவை தொடர்பான விடைகளை பிரபாகரனின் மனவுலகத்தில் மாத்திரம் தேடுவது பேதமையானது.
 
மேற்கூறப்பட்டவைக்கான விடைகளை இலங்கைத் தமிழ் சமூகத்தின் அரசியல் ஆதிக்கத்தை கையப்படுத்தி வைத்திருக்கும் யாழ்ப்பாணியத்தை ஈவிரக்க மின்றி சமுக அரசியல் ரீதியாக பகுப்பாய்வு செய்வதன் மூலம் மாத்திரமே கண்டுகொள்ள முடியும் என்றே நான் கருதுகிறேன். அது மட்டுமன்றி, யாழ் தமிழ் சமூகத்தினுள் ஆள வேருன்றியுள்ள அதன் அடிக்கற்களான ஜாதிய ஆதிக்கம், பிரதேசவெறி, ஆணாதிக்கம், ஊர்வாதம், சுயமையவாதம் (self centrism) என்பன எவ்வாறு இந்த வெற்றுத் தமிழ் தேசிய படாபடோபத்தினால் இழுத்துப் போர்த்தி மூடப்பட்டன என்னும் விடயமும் முழுமையாக வெட்டித் திறந்து பார்க்கப்படல் வேண்டும். ஒரு காலத்தில் யாழ்பாணச் சமூகத்தினுள் வர்க்கப் போராட்டத்தையே தீண்டாமை ஒழிப்பு போராட்டம் என்னும் ஜாதி எதிர்ப்பு போராட்டமாகத்தான் யாழப்பாண மாக்ஸிஸ்டுக்களால் நடத்த முடிந்தது. அந்தளவிற்கு அச்சமூகத்தில் ஜாதிக்கும் வர்க்கத்திற்குமான இடைவெளி நுண்ணியதாகக் காணப்பட்டது.
 
தமிழ் சமூகத்தின் மீதான இலங்கை அரசின் ஒடுக்குமுறை வியாபித்து 'தமிழ் தேசிய' விடுதலை என்னும் பெயரில்  ஆயுதப் போராடம் வளர்ந்த காலத்தில்கூட "இது நளவர் பள்ளரின்ற இயக்கம்"  "அந்த இயக்கத்துக்குள்ள கண்ட சாதிகளும் இருக்கிதுகள்" போன்ற கருத்துக்கள் யாழ்ப்பாண சமூகத்தில் மிகச் சாதாரணமாகவே புளங்கின. புலிகள் ஏனைய இயக்கங்களை அழிக்கும்போது, "அவங்கள் வெளிமாவட்டப் பொடியளைத்தான் கொல்லுறாங்கள். யாழ்பாண பொடியளை கொல்ல இல்லை". "வெளிமாவட்ட சனியங்கள்தான் இங்கை வந்து கண்ட இயக்கங்களோடையும் சேர்ந்து களவெடுக்கிதுகள்" என்னும் அளவுக்கான கீழ்த்தரமான பிரதேசவாதமும் அங்கு சகஜமாக நிலவியது.
 
ஆகவே, புலிகள் என்பது தனியொரு குழு, பிரபாகரன் என்பவர் தனியொரு நபர் என்று முடிவுக்கு நாம் வருவது அபத்தமானதாகும். அப்படியான முடிவுக்கு வருவதன் மூலம் அந்த சமூகத்தினுள் ஆழுமையில் இருக்கும் ஆதிக்க வெறிகொண்ட மோசமான  சமூக அரசியல் போக்கினை மீண்;டும் உரமிட்டு வளர்ப்பவர்களாவோம். பிரபாகரன் சிந்தனை, புலிகள் இயக்கச் செயற்பாடு என்பதுதான் யாழ்ப்பாணியத்தின் சமூக அரசியல் அடித்தளம். பிரபாகரனும் புலிகளும் பிரதிநிதித்துவப்படுத்திய ஜனநாயக மறுப்பு, தமிழ் சமூகத்தில் இயங்கும் சகல அமைப்புகள் மீதான கொடும்பிடி, தாம் மடடுமே சரி மற்றெல்லாம் தவறானவை, பயனற்றவை, எனவே அழிக்கப்படலாம் என்கின்ற சுயநல, சுய மையவாத போக்கு என்பவற்றை, நாம் யாழ்பாணியத்தினுள் நாளாந்த சமூக வாழ்க்கையில் பல்வேறு தரப்பினரிடையே, பல்வேறு தளங்களில், பல்வேறு தரத்தில் காணலாம்.
 
இதில் மிக மோசமானது என்னவெனில் புலிகளின் அரசியலுக்கு எதிர் அரசியல் செய்தவர்கள், புலிகளின் ஜனநாயக மறுப்பை விமர்சித்தவர்கள், புலிகளின் ஊடக ஒடுக்கு முறையை கண்டித்தவர்கள், புலிகளின் மனித உரிமை மீறல்களை கண்டித்து மனித உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள் என எல்லோரிடத்திலும் இந்த யாழ்ப்பாணியத்தின் போக்குகள் கணிசமாக இருப்பதை நாம் காணலாம். அவரவர் பலம்பெறுகின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் இந்த யாழப்பாணியத்தின் போக்கை அருவருக்கத்தக்க வகையில் அவர்களும் வெளிப்படுத்தி வந்துள்ளனர் என்பது அருவருப்பான உண்மையாகும்.
 
இந்த யாழப்பாணிய பிற்போக்குத்தனமான ஆதிக்கச் செயற்பாட்டின் சமூக, அரசியல், மனோவியல் போக்குகளை சரியாக கணிப்பிட முடியாது. அதனுடன் மோதியவர்கள்; அடித்து நொருக்கப்பட்டார்கள். அதன் போக்குகளை நன்கு அறிந்திருந்தும் அதனுடன் மோதாது அதற்கு ஒத்தூதி, பின்னர் எல்லாவற்றையும் சமாளிக்கலாம், மாற்றலாம் என்று கனவுகண்டவர்களும் தோல்வியைத்தான் தழுவினார்கள்.
 
வெளியிலே முற்போக்கு பேசியபடி அதேவேளை உள்ளுக்குள்ளே அதே யாழப்பாணியத்தின் ஒரு கூறாக இருந்தபடி அதனை நியாயப்படுத்தியவர்களும் இன்று மூக்குடைபட்டு நிற்கின்றார்கள். அதனை நியாப்படுத்தி அதற்கு சர்வதேச சமூக அங்கீகாரம் பெற்றுக்கொடுத்த பலர் அதனாலேயே அழிக்கப்பட்டும் விட்டனர். யாழ்ப்பாணியத்தின் பிரதிபிம்பமான புலியிச அரசியலில் தொங்கி வித்தைகாட்டி மிதந்து விடலாம் என கனவு கண்டவர்கள் எல்லோரையம்கூட அது கடித்து சப்பி சக்கையாகத் துப்பித்தானிருக்கிறது.

ஆகவே புலிகளின் வளர்ச்சியையும், செயற்பாடுகளையும், தோல்வியையும் பிரபாகரனின் மண்டைக்குள் தேடுவதை விடுத்து அதனை எமக்குள்ளேயே தேடினால்தான் அதற்கான சரியான விடைகளைக் முடியும். யாழ்ப்பாணியம் என்னும் அழிவு இயந்திரத்தின் கூரிய பற்களாக செயற்பட்டு அதனாலேயே கடித்துக் குதறப்பட்டவர்கள்தான் பிரபாகரனும், அவரது தளபதிகளும், அவரது துதிபாடிகளும் என்பதே உண்மை எனவே எல்லாப் பழியையும் பிரபாகரனினதும் அவரது கூட்டாளிகளினதும் தலைமேல் சுமத்திவிட்டு யாழ்ப்பாணியம் புதுவேஷத்தோடு, புதுக்கோஷத்தோடு வருவதற்காக மீண்டும் தயாராகிறது என்பதையிட்டு எச்சரிக்கையாக இருப்பதே சாலச் சிறந்தது.

'வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம்' எனறு பிரபாகரன் சொல்வாராம் என்று கட்டுரையாளர் முடிவில் கூறியிருக்கிறார். இதே போன்றதொரு கருத்தை ஜே.வி.பி. தலைவரான ரோஹன விஜேவீர சிறையில் இருக்கும்போது கூறியதாக தென்னிலங்கை முன்னாள் ஜே.வி.பி. நண்பரொருவர் ஒருமுறை என்னிடம் கூறினார். "எமது புரட்சி தோல்வி கண்டதால் எல்லோரும் இதனை '1971 ஏப்ரல் கிளர்சி' என்று சொல்லுகிறார்கள். இன்று பலர் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் விமர்சிக்கிறார்கள். ஆனால் அது வென்றிருந்தால் எல்லோரும் எமது வெற்றியின் களிப்பைப் பருகியபடி இதுவே மாபெரும் புரட்சி என்று கொண்டாடியிருப்பார்கள். வென்றால் புரட்சி தோற்றால் கிளர்ச்சி" என்றாராம் ரோஹன விஜேவீர.
 
ஆனால் 1971ம் ஆண்டில் மண் கவ்விய அவரது புரட்சி, 1987ல் விஜேவீரவும் அவருடைய பிரதான சகாக்களும் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களின் உயிர்களும் பறிபோனதோடு படு தோல்விகண்டதே, அது எப்படி? 1971இல் இருந்து 1987வரை அவர்கள் தங்களை மீளாய்வு செய்யவில்லையா அல்லது 1971ல் ஏற்பட்ட தோல்வியின் படிப்பினைகளை அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லையா? அவர்களது தோல்வி இன்றும் எதைக்காட்டி நிற்கின்றது? எங்கேயோ பாரிய தவறு விடப்பட்டிருக்கிறது என்பதையல்லவா? வேரிலேயே அழுகல் இருந்தால் விருட்சம் உருப்படுமா? என்பார்களே அதுபோல்தான்.
 
1971ம் ஆண்டு தோல்விக்குப் பின்னர், ஜே.வி.பி.யுடன் இருந்து வெளியேறிய பலர் பின்னர் அதன் தலமையையும்  அதன் கொள்கை செயற்பாடுகளையும் மிகக் கடுமையாக விமர்சித்தனர். அவர்களில் சிலரிடம் நான் பேசியபோது 1971ல் உங்களுக்கு எப்படி ஜே.வி.பி.யின் கொள்கைகள் செயற்பாடுகள் தவறாக தெரியவில்லை? என்று வினவியிருக்கிறேன். அதற்கு அவர்கள் "தவறுகள் தெரிந்தாலும் அப்போது எமக்கு வேறு மாற்று இருக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கும், அரசுக்கு எதிராக தாக்கமுள்ள அழுத்தத்தை கொடுக்கும் ஒர் இயக்கமாக ஜே.வி.பி. மட்டுமே இருந்தது." என்றார்கள். "ஆனால் ஜே.வி.பி.யின் தவறான போக்குகள் மக்களை அழிவுக்குத்தான் கொண்டுபோகும் என்பதை நாம் பின்னர் அறிந்துகொண்டோம். அந்தப் போராட்டம் வெற்றி பெறமாட்டாது என்பதும் எமக்கு தெரியும்" என்றனர்.
 
புலிகளின் போராட்டமும் அதற்கு கொள்கை வகுத்துக் கொடுத்த யாழ்ப்பாணியத்தின் போராட்டமும் வெற்றிபெறமாட்டாது என்பது ஆரம்பத்திலேயே புரிந்து கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அன்று முதல் புலிகளுக்கு முண்டுகொடுத்து ஆதரித்த தமிழ் சமூகத்தின பல தரப்பினருக்கு புலிகளைவிடவும் வேறு மாற்றுக்கள் நிரம்பவே இருந்தன.
 
தமிழ் மக்களின் 'தேசிய விடுதலைப்  போராட்டத்துடன் தமிழ் சமூகத்துக்குள்ளேயே புழுத்து, முட்டை நாற்றமெடுத்த பிற்போக்குத்தனங்களைத் தூக்கியெறிய வேண்டும் என்னும் நோக்கில் உருவாகிய அரசியல் செயற்பாடுகள் பல இருந்தன. ஆனால் அந்த யாழ்ப்பாணியத்துடன் ஒத்துப்பாடி சமூக அங்கீகாரம் பெறும் அற்பத்தனமான ஆதிக்க ஆசை அந்தத் தரப்பினரை புலி அரசியலை நோக்கித் தள்ளியது. மனித சமூகத்தை வெறும் மந்தைகளாக பார்க்கும் வெறித்தனம் மிக்க ஒரு வெற்று மனிதனை, இந்த சமூகம் தலைவனாக தூக்கி வைத்தது. தவறான அரசியல் செயற்பாடுகளை கேள்வியின்றி ஆதரித்தது.
 
இத்தகைய பின்னணியில் இந்தப் போராட்டம் வெற்றிபெற்று 'சரித்திரமாகும்' என்ற கனவுலகில் அது தமிழ் சமூகத்தை வாழ வைத்தது. விதையிலேயே சூத்தை விழுந்த இப்போராட்டம் வெற்றியடைந்திருக்காது என்பது தான் உண்மை. ஆகவே அப்போராட்டத்தின் தோல்விதான் இன்று சரித்திரமாகியிருக்கிறது. அதன் முப்பது வருடப் பாதையில் அது அடைந்ததாக கூறிய இராணுவ வெற்றிகள் எல்லாம் இன்று வெறும் சம்பவங்கள் மட்டுமே.

நன்றி உதயம்