Saturday 9 May 2009

கருணா என்கின்ற முரளிதரனுக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கும். பகுதி 12

- யஹியா வாஸித் -

இலாபம் கிடைக்கிறது என்பதற்காகநியாயத்திற்கு விரோதமாகப் போகக்கூடாது.

தொழில் தொடங்க விரும்பும் பலர் நம்மிடம் பணம் இல்லையே. நம்மால் எப்படி முடியும். நம்மால் எப்படி தொழில் தொடங்கி வெற்றிகரமாக முன்னேற முடியும் என எண்ணி பிள்ளையார் சுழி போடுவதற்கே பல தோப்புக்கரணங்கள் போட்டு முடியாதுப்பா இது நம்மால் முடியாதுப்பா என ஒதுங்கி விடுவார்கள். முடியும் என்னால் முடியும் என்று புறப்படுபவர்கள்தான் பின்னர் சரித்திரங்களில் உலாவருவார்கள். எவருமே முழு மனிதனாக இருப்பதில்லை. பணம் இருப்பவரிடம் ஐடியா இருப்பதில்லை. ஐடியா இருப்பவரிடம் பணம் இருப்பதில்லை. இரண்டும் இருப்பவரிடம் உழைக்கும் ஆர்வம் இருப்பதில்லை. இங்கு எல்லாவற்றுக்கும் பணமே முழுமுதல் காரணியாக இருக்கின்றது.அங்கும் இங்கும் அலைந்து அதிக வட்டிக்கு பணம் வாங்கி தொழிலில் அடிபட்டு உருத்தெரியாமல் போனவர்களுமுண்டு.

தொழில் தொடங்கத் தேவையான நிதியைத் திரட்டுவதில் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு செயற்பட வேண்டியது தொழில் தொடங்குவோரின் கடமையாகும். தொழில் ஒன்றை தொடங்க பணம் திரட்டும் போது எளிய முறையில் பணம் கிடைக்கும் வாய்ப்புகளையும், எங்கிருந்தெல்லாம் இவற்றை திரட்டலாம் என்பதையும் முன் கூட்டியே தெரிந்து வைத்திருப்பது மிக மிக அவசியம்.திடீரென்று பணத்தை திரட்டிவிட முடியாது. அப்பணத்தை திரட்ட ஏற்படும் காலதாமதம், விதிமுறைகள், வாங்கிய நிதியை திருப்பி செலுத்தும் முறை, அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிறப்பு முயற்சிகள் என்பவற்றை பற்றியெல்லாம் தொழில் தொடங்க முன்னரே ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

சொந்த நிலம், பங்குப்பத்திரம், சேமிப்பு பணம், நண்பர்,உறவினர்கள் தவிர இன்று உலகம் முழுதும் தொழில் தொடங்குவோருக்கு உதவி செய்ய என ஆயிரம் நிதிநிறுவனங்கள் (பைனான்சியல் இன்ஸ்ரியூசன்) மற்றும் வங்கிகள், நீண்டகாலக் கடன் நிறுவனங்கள், குறுகிய காலக்கடன் நிறுவனங்களும் தொழில் முனைவோருக்கு உதவுகின்றன. வங்கிகளிடம் இலகுவாக கடன் பெற்று விடலாம் என்ற அசட்டு நமபிக்கையில் தொழில்களை தொடங்கிவிட்டு பின்னர் வங்கிகளிடம் கடன்பெற முடியாமல் மூக்குடைபட்டவர்கள் அனேகம்பேர் நம்மிடையே இருக்கின்றனர். இவர்கள் கடன் வழங்கும் அதிகாரிகளிடமும், மேலாளர்களிடமும் சரியான தகவல்களை வழங்குவதில்லை. கடன் கேட்பவர் யார்,அவர்எதற்கு கடன்கேட்கின்றார்,இக்கடனை வைத்து என்ன செய்யப் போகின்றார், கடனை திருப்பிச் செலுத்த அவரிடம் தகுதி இருக்கிறதா என்ற விபரங்கள் தெரியாமல் எந்த வங்கியும் கடனை வழங்கி விடாது.

முதலில் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவான பதிலை சொல்வதுதான் கடன் பெறுவதற்கான முதல் வழி. என்ன கேள்விகளை அங்குகேட்பார்கள், அவற்றுக்கு எப்படி பதில் சொல்வது என்பதை தெளிவாக தீர்மானித்துக் கொள்ள வேண்டும். உங்கள் கல்வி தகுதி அல்லது தொழில் அனுபவம்,உங்கள் நிர்வாக முறை,உங்கள் சாதனைகள் என்பவற்றை விளங்கும் படியும், விளக்கமாகவும் அளிப்பதுடன், இந்த தொழிலை செய்ய ஏன் முன் வந்தீர்கள், இந்த தொழிலை தொடங்கி செய்தால் எவ்வாறான பக்க பலம் எல்லாம் உங்களுக்கு கிடைக்கும் என்பதையும் வங்கி அதிகாரிகளுக்கு விளக்க வேண்டும்.

எதிர்காலத்தில் உங்கள் தொழில் எப்படி எல்லாம் வளர்ச்சி பெறும், எத்தகைய இலாபத்தை எதிர் நோக்கி உள்ளது, எவ்வாறெல்லாம் விரிவுபடுத்த உள்ளீர்கள் என்பதை எல்லாம் கூறுவதுடன் எவ்வாறெல்லாம் தோல்வி ஏற்பட வாய்ப்புள்ளது, அதனை எவ்வாறு எதிர் கொள்வீர்கள், அதை எவ்வாறு சரி செய்வீர்கள் என்பதையும் விளக்க வேண்டும்.உங்கள் தொழிலை நிர்வகிக்க நீங்கள் எந்த வகையான திட்டங்களை உருவாக்கியிருக்கின்றீர்கள் என்பதைத் தெளிவாக விளக்குவதன் மூலம் உங்கள் திறமையை பிறர் எளிதில் உணரும்படி செய்து விடலாம். சில நேரங்களில் திட்டமிடல் மிகச் சிறந்ததாக இருக்கும். ஆனால்அந்த திட்டத்தை செயல்படுத்தும் போது பல வித பிரச்சனைகள் எழ வாய்ப்புள்ளது. எனவே உங்கள் தொழிலை எப்படி நிர்வகிக்க இருக்கின்றீர்கள், அதன் மூலம் எப்படி தொழில் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியும், போன்ற விபரங்களை வங்கிக்குச் செல்லும் போது கைவசம் வைத்திருக்க வேண்டும்.

நிதி நிறுவனங்களிலும், வங்கிகளிலும் கடன் பெறும் போது உங்கள் சொந்த நிதிநிலை பற்றிய தகவல்களை அவர்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும். சில வங்கிகள் கடன் தரமுதல் உங்கள் சொத்துக்களின் ஒரு பகுதியை வங்கியில் வைப்பிலிடக் கோருவர். ஒரு தொழிலை தொடங்கி வெற்றிகரமான தொழிலதிபராக உங்களால் நிச்சயமாக மாற முடியும் என்பதற்கான ஆதாரங்களை அழுத்தமாக தெரிவிப்பதன் மூலம் நிதி நிறுவன அதிகாரிகளை திருப்தி அடைய செய்துவிடலாம். உங்கள் தொழிலின் முக்கிய பிரிவுகளான உற்பத்தி (புறடக்ஸன்), நிதிநிலை (பைனான்ஸ்),மனிதவளம் ( ஹியுமன் ரிசோர்ஸ்), சந்தைப்படுத்தல் (மார்கட்டிங்) போன்றவற்றை எப்படி நிர்வகிக்க இருக்கின்றீர்கள் என்பதை விரிவாக தெரிந்திருப்பது அவசியமான தொன்றாகும்.

உங்களின் தொழில் நுட்ப அறிவோடு அனுபவ அறிவு, உங்கள் தொழில் வெற்றிக்கு எப்படி எந்த வகையில் கைகொடுக்கும் என்பதையும் தெளிவாக்குவது நல்லது.

நிதி நிறுவனங்களும்,வங்கிகளும் நம்மிடம் எதை எதிர்பார்ப்பார்கள் என்பதை மனதில் நிலை நிறுத்திக் கொண்டு இவர்களிடம் உதவி கேட்டு செல்வதுதான் ஒரு தொழில் முனைவோனுக்கு அழகு. கடன் பெற செல்லும் போது கவனிக்க வேண்டிய சில விடயங்களை பார்ப்போம்.

உங்கள் திட்ட விபர அறிக்கையின் ( புறஜக்ட் ரிப்போர்ட்) இரண்டு மூன்று பிரதிகளை கையில் வைத்துக் கொள்ளுங்கள். அதிகாரிகளிடம் கலந்துரையாடும் போது எல்லோர் கைகளிலும் பிரதிகள் இருப்பது இலகுவாக இருக்கும்.

உங்கள் திட்ட அறிக்கையின் சகல விபரங்களையும் தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. திடீரென அதிகாரிகள் கேள்விகள் கேட்டால் உங்களால் இலகுவாக பதிலளிக்க முடியும்.

அதிகாரிகளிடம் கலந்துரையாடும்போது வியாபார முறைப் பேச்சாக உங்கள் கலந்துரையாடல் அமையும் படி பார்த்துக் கொள்ளுங்கள். மிகப்பெரிய உதவியினை செய்தவரிடம் கைகட்டி வாய்பொத்தி நிற்பது போன்ற அநாவசிய பணிவு தேவையே இல்லை.இதனைப் பல அதிகாரிகள் விரும்புவதும் இல்லை.

உண்மையயான தகவல்களை மட்டும் கொடுங்கள்.தவறான தகவல்களை கொடுத்தால் பின்னர் நீங்கள் நிம்மதி இழந்து தவிக்க நேரிடும்.

தைரியமுடன் அதிகாரிகளை சந்தியுங்கள்.

எந்த தகவலையும் மறைக்காது தெளிவாக முதலிலேயே சொல்லி விடுங்கள்.

எல்லா நிதி நிறுவனங்களும்,வங்கிகளும் நல்ல தொழில் முனைவோரையே விரும்புகின்றன என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நல்ல தொழில் முனைவோராய் இதிகாரிகளைச் சந்தியுங்கள்.

நீங்கள் தகுதியானவராகவும் தேவையான ஆவணங்களை கொண்டுள்ளவராகவும் இருந்தால் உங்களுக்கு நிதி உதவி கிடைப்பது சர்வநிச்சயம்.

தீக்கோழி வளர்ப்பு பற்றி நிறைய அன்பர்கள் இணையத்தளங்களுக்கு எழுதியிருந்தனர். தீக்கோழி பற்றி நாம் கேள்விப்பட்டது மிக மிக குறைவே. தீக்கோழி மாதிரி மண்ணுக்குள் தலையை புதைத்துக் கொண்டு நிற்கின்றான் என அறிவு குறைந்த செயலில் ஈடு படுபவர்களை பார்த்து நம்மவர்கள் கேலி பேசுவதுண்டு. ஆனால் அதன் பயன்பாடு பற்றி அறிந்தால் யாரும் அப்படி பேசமாட்டார்கள். இந்த தீக்கோழியால் எதிர்காலத்தில் மனிதனுக்கு ஏற்படப் போகும் பயனும்,ஆரோக்கியமும் அளப்பரியது. இன்று ஐரோப்பா,அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகள் இதன் பயன் உணர்ந்து தீக்கோழிப்பண்ணைகள் ஆரம்பித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தென்னாபிரிக்காவில் இதை பசுப்பறவை (கவ் பேர்ட் ) என்றுதான் அழைக்கின்றனர்.அந்தளவுக்கு இதன் பயன் அதிகமானது. ஆனால் பண்டய நமது தமிழ் இலக்கியங்கள் காரப் பசுப்பறவை என்றே இத்தீக்கோழியை குறிப்பிடுகின்றன.பசு ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத்தான் பால் தரும்.ஆனால் காரப்பசு என்பது என்றுமே நாம் கேட்டதையெல்லாம் சுரந்து கொடுக்கக் கூடியது. சிறிலங்காவின் காலநிலை,வெப்பசுவாத்தியம் என்பன தீக்கோழிக்கு மிக மிக பொருத்தமானதாகும்.ஒரு சோடிப் பறவைக்கு கால் ஏக்கர் நிலம் தேவை.பசு வருடத்திற்கு ஒரு கன்றுக்குட்டியைத்தான் தரும். ஆனால் தீக்கோழி வருடத்திற்கு60 முட்டையிடும். இதன் குஞ்சுகள் 12 மாதத்தில் வளர்ச்சி அடைவது மட்டுமல்லாமல் சாதாரண எமது புல்லே இதற்கு உணவாக உபயோகிக்கலாம்.

இதன் முட்டையில் கொழுப்புச்சத்து கிடையவே கிடையாது.இதன் இறச்சியிலும் கொழுப்பு குறைவாக கிடைப்பதுடன் உலக மார்கட்டில் மிக அதிக விலையுள்ள இறச்சியும் இதுவே.இதன் தோலில் இருந்து உடைகள்,சப்பாத்துக்கள்,பைகள் எனபனவும் முட்டைக் கோதுகள் ஆபரணங்களாகவும், முட்டைகள் அலங்காரப் பொருளாகவும் உலக சந்தையில் வலம் வருகின்றது.அதன் குஞ்சுகள் மத்திய கிழக்கில் உள்ள மாளிiகைகளிலும்,அரச தோட்டங்களிலும் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. தீக்கோழி,ஜேர்மன் பொயர் ஆடு மற்றும் அவுஸ்திரேலியா பசு வளர்ப்பு சம்பந்தமான ஒரு கருத்தரங்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம்

கொழும்பில் ஒரு ஐரோப்பிய கம்பனியின் அனுசரணையில் நடைபெற உள்ளது. விரும்பியவர்கள் தொடர்பு கொள்ளலாம்.;.( email : yahiyawasith@ymail.com)

புன் முறுவல் இல்லாத மனிதர் கடை திறக்க வேண்டாம்.

(முற்றும். இதுவரை நான் எழுதிய கட்டுரைகள் 12 பாகத்திலும் ஏதாவது பிழைகள், தவறுகள் இருப்பின், என்னைத்திட்டவோ திருத்தவோ விரும்புபவர்கள் எனது ஈமெயிலுக்கு திட்டி எழுதலாம்.

நன்றி)
9 -5 - 2009

No comments: