Sunday 19 April 2009

கருணா என்கின்ற முரளிதரனுக்கும், கிழக்கு மாகாண மக்களுக்கும். (பகுதி 9)

- யஹியா வாஸித் -

இயந்திரங்கள் வேலைதான் செய்யும் மனிதன்தான் சிந்திக்க வேண்டும்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது,தனிமனித வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்த தென்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனது நாடு,எமது பொருளாதார வளர்ச்சி,எமது நாட்டின் சுபீட்சம் எனபெரிதாக முழங்கும் பெரிய மனிதர்கள் கூட தமது சொந்த தொழில்,திட்டங்கள், நடவடிக்கைகள் என்று வந்து விட்டால் இலாபம் ஒன்றே பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படுவதை கண்டிருப்பீர்கள். இவர்கள் ஒரு நிமிடத்தையேனும் செயல்ரீதியான நடைமுறை களுக்கு ஒதுக்கி சிந்திப்பார்களேயானால் இப்போது நாம் எங்கேயோ போயிருப்போம். ஆனாலும் இன்றும் எம்மத்தியில் தனிப்பட்ட இலாபம் ஒன்றை மட்டுமே கொள்ளாமல் நமது நாடு,நமது எதிர்காலச் சந்ததி,நாட்டின் உழைப்பாளர் சக்தி,அவர்களது ஜீவனோபாய வசதிகள் என்பவற்றிற்காகவும் சிந்நித்து தொலைநோக்குடன் செயல்படும் தொழிலதிபர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

ஓவ்வொரு தனி மனிதனும் தங்கள் தொழில் முயற்சியில் நாட்டு நலன்,தொழிலாளர் நலன்,இயற்கைச்சமநிலை என்பவற்றை மதித்து திடமான திட்டங்களை வகுத்து செயல்படுவோமானால் நாமும் நமது நாடும் இப்போது சிங்கப்பூருக்கு சவால்விட்டுக் கொண்டிருப்போம். எதிர்காலம் ரொம்ப வேகமாக வளரப்போகின்றது. ஒரு வியாபாரி எப்போதும் எதிர்காலத்தை திட்டமிடுபவனாக இருக்க வேண்டும்.அடுத்து இரண்டு வருடத்தில் என்ன தேவைப்படும்,எந்தப் பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதை முன்கூட்டியே திட்டமிடுபவன்தான்  ஒரு வியாபாரியாக இருக்க முடியும்.

குறிப்பாக ஆசியாவில் அதுவும் நமது நாட்டில் இன்னொருவர் செய்யும் வியாபாரத்தை தானும் கொப்பிகட் பண்ணி அவரையும் வியாபாரம் செய்ய விடாமல் செய்து. இவரும் மூக்குடைபட்டு இறுதியில் இருவரும் அரபுநாடுகளுக்கோ அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கோ மலையேறுபவர்கள்தான் அதிகம்.இதை மாற்ற வேண்டும்.தனியாக வித்தியாசமாக சிந்திக்க வேண்டும்.

இன்று உலகமே மின்சாரத்தட்டுப்பாட்டால் திணறுகிறது.நீர்வீழ்ச்சிகளில் நீரில்லை.மழை பொய்த்துவிட்டது,நிலக்கிரி சுரங்கங்களிலும் நிலக்கரி தட்டுப்பாடாகிவிட்டது.ஆம் சோலார் (சூரிய ஒளியை கொண்டுமின்சாரம்) தட்டுக்களுக்குத்தான் இனி மவுசு.சைனா ஏற்கனவே களத்தில் இறங்கிவிட்டது.சோலார் கார்பெற்றரி சார்ஜர்,சோலார் மொபைல் போன் சார்ஜர்,சோலார் வோட்டர் ஹீற்றர்,சோலார் வோட்டர் பம்ப் என தொடங்கி சோலார் ஸ்ரீட் லைட் என சைனா இயற்கையை தன் வசப்படுத்திக் கொண்டு விட்டது. உலகில் உள்ள பாரிய பைவ் ஸ்டார் ஹோட்டல்கள் தொடங்கி பெரிய நிறுவனங்கள் எல்லாம் சோலாருக்கு மாறிக் கொண்டிருக்கின்றன.

இந்தியாயும் இப்போது சைனாவுடன் போட்டி போட்டுக் கொண்டு சோலார் புறடக்ட்களை மிக குறைந்த விலையில் விற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.சூடானில் உள்ள 75 வீதமான வீதி விளக்குகளும்,பஸ் நிலைய பெயர் பலகைகளும் சோலார் வெப்பத்திலேயே இயங்குகின்றன.சோலார் பொபைல் சார்ஜர் 10 யு.எஸ்.டொலர்,சோலார் ஜெனரேட்டர் 1000யு.எஸ்.டொலர்,சோலார் ஸ்ரீட் லைட்( எலக்றிக் போஸ்ட்) 1100 யு.எஸ்.டொலர் என வியாபாரம் கொடிகட்டிப்பறக்கிறது.இதை வாங்கி உபயோகித்தால் ஆயுளுக்கும் நீங்கள் மின்சாரக்கட்டணம் கட்டவேண்டியதில்லை.இப்போதே உங்கள் கிராமங்களில் பெட்டிக்கடைகளை திறந்து விடலாம். அடுத்த ஓரிருவருடத்தில் நீங்கள்தான் சோலார் கிங். நீங்கள்இப்போது இருக்கும் நாட்டில் உள்ள சைனா அல்லது இந்தியா எம்பஸிக்கு ஒரு விசிட் பண்ணுங்கள்.

முந்தா நாள் (12.04.2009)ஆசியன் டெவலப்மன்ற் பேங் சிறிலங்காவுக்கு 160 மில்லியன் யு.எஸ்.டொலர் மின்சார அபிவிருத்திக்கு ஒதுக்கி உள்ளார்கள்.உடனடியாக உங்கள் அமைச்சர்களை யோ அபிவிருத்தி சம்பந்தமாக கதைப்பவர்களையோ தேடிப்பிடித்து நிரந்தர சோலார் புறடக்ட்டுக்கு ஏற்பாடு பண்ணச் சொல்லுங்கள். ஐ.ரி.துறையில் உண்மையிலேயே சிறிலங்கன்தான் நம்பர் ஒன்.ஆனால் இந்திய அரசு.இந்திய அமைச்சர்களும் இந்த துறையில் மூக்கை நுழைத்ததால் நாம் அதள பாதாளத்தில் இருக்கிறோம்.சிறிலங்காவிலேயே யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.ரி.பார்க் பல ஜீனியஸ்களை உருவாக்கியுள்ளது. இந்த யுத்தம் அவர்களை தூக்கி கடாசிவிட்டது.என்றாலும் காலம் கடந்து விடவில்லை.

உலகம் முழுதும் உள்ள பாரிய நிறுவனங்கள் கொம்பியுட்டர்களை ஒருவருடம் பாவித்துவிட்டு தூக்கி கிடப்பில் போட்டு விடுவார்கள்.அவைகளை மொத்தமாக 10 அல்லது 20 யு.எஸ்.டொலர் கொடுத்துவாங்கி சிறிது திருத்தி "யூஸ்ட் கொம்பியுட்டர்"என்ற பெயரில் சில கம்பனிகள் மொத்தமாக விற்பார்கள்.அதாவது 65 டொலர் முதல் 125 டொலர் என மொத்தமாக விற்கும் ஆயிரம் கம்பனிகள் புலம்பெயர்நாடுகளில் கொட்டிக்கிடக்கின்றன. பெண்டியம் போர்(4) 98 டொலருக்கு இவர்களிடம்சில சமயம்பெறமுடியும். இவைகளை ஒரு கன்டய்னரில்(20அடி) 348 கம்பியுட்டர் என வாங்கலாம்.சிறியளவிலும் வாங்கலாம். இவைகளை எமது நாட்டில் கொள்ளை விலைக்கு விற்கலாம். இன்டர் நெட்டை திறந்து யூஸ்ட் பொம்பியூட்டர் அமெரிக்கா அல்லது யுனைட்டெட் கிங்டம் போய்பாருங்கள்.இவ்விரண்டு நாட்டிலும்தான் தரமான பொருள்கிடைக்கும்.

இதில்ஒரு 100ஐ இம்போட் பண்ணி உங்கள் கிராமங்களில் உள்ள பாடசாலை அதிபர்களுடாக மாணவர்களுக்கு மாதாந்த கட்டண அடிப்படையில் (இன்ஸ்சோல்ட்மென்ட்) வியாபாரத்தை தொடங்குங்கள்.அப்புறம் மெதுவாக அதற்குரிய பார்ட்ஸ் என தொடங்கி வியாபாரத்தை விருத்தி செய்யலாம்.

இதேபோல்தான் பேக்கரி எகியுப்மன்ட் ரொம்ப மலிவாக ஐரோப்பிய நாடுகளில் பெற முடியும்.சோலாரில்,டீசலில்,மின்சாரத்தில்,கையினால் இயக்குவது என பல தினுசாக பெறமுடியும். 5000டொலர் கொடுத்து அனைத்து உபகரணங்களையும் பெற முடியும்.ஒரு வாரம் பயிற்சியும் அளிப்பார்கள். கம்பளை பள்ளிவாசலுக்கருகில் உள்ள பேக்கரிக்கும்,பண்டாரவளை சந்தை சதுக்கத்தில் உள்ள பேக்கரிக்கும் ஒரு குட்டி விஸிட் செய்து பாருங்கள். 4000 டொலருடன் தொடங்கிய இவர்களது வியாபாரம் இப்போது ஐந்து பிறான்ஜ் 40 ஊழியர்கள் என கொடிகட்டிப்பறக்கிறது.ஐரோப்பிய நாடுகளில் பத்து வருடத்துக்கு முதல் குதிரைக்கு கொள்ளு போட்டுக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருக்க நாம் ஐரோப்பாவில் இருந்து கொண்டு வீதிகளில் கொடிபிடித்துக் கொண்டு. அண்ண எப்போ சாவார் தின்னை எப்போ காலியாகும் என நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம். அதை மகின்தவும் குடும்பமும் பார்த்துக் கொள்ளுவார்கள். நமக்கு டெய்லிபிறட்டுக்கு பணம் நாம்தான் உழைக்க வேண்டும். அழுதும் பிள்ளை நம்ம பொண்டாட்டிமார்தான் பெற வேண்டும். அரசாங்கம் வந்து பெற்றுத்தரமாட்டாது. நாம் பிள்ளையை பெற்றவுடன் அரசு வந்து தடுப்பூசி,இலவச கல்வி என தரத்தொடங்குவார்கள்.எனவே நாம் முதலில் பிள்ளையைப் பெறுவோம்.அப்புறம் அரசிடம் போய் உதவிகளை கேட்போம்.

ஒவ்வொரு நாட்டிலும் நூற்றுக்கணக்கான சேம்பர் ஒப் கொமர்ஸ் இருக்கிறது.கட்டாரில்கட்டார் சேம்பர் ஒப் கொமர்ஸ் மிக பிரபல்யம்.அதற்குள் யாரும் போகலாம்.நூற்றுக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள்.ஆயிரக்கணக்கான உற்பத்தி நிறுவனங்களின் கையேடுகள்,இலவசமாக இன்டர்நெட் வசதி என தகவல்களை வைத்துக் கொண்டு அரபிக்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு தரம் இதற்குள் விசிட் பண்ணி வேண்டிய தகவல்களை பெறலாம்.இலவசமாக ஒரு கஃவா ( அரேபியர்கள் அருந்தும் காபி) குடித்து விட்டுமும் வரலாம். சில நேரம் ஏதோ ஒரு கட்டார் கம்பனிக்கு நமது நாட்டில் நாம் தூக்கி வீசும் மாங்கொட்டை தேவைப்படலாம்.(அடுத்த பாகத்தில் மாங்கொட்டை பற்றி விரிவாக எழுதுகின்றேன்).

இப்படித்தான் தமிழ்நாடு மெட்ராஸை சேர்ந்த இளைஞர் ஒருவர் இங்கிலாந்தில் உள்ள பேர்மிங்ஹாம் சேம்பர் ஒப் கொமர்ஸ்ஸ_க்கு ஒரு முறை பொழுது போக்குக்காக சென்றுள்ளார்.அங்குள்ள லைப்ரரியில் புத்தகங்களை படித்துக் கொண்டிருக்கும் போது அருகில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த வெள்ளையர் ஒருவருடன் பேசியதில். அவர் வெப் டிசைனிங்கம்பனி ஒன்று திறப்பதற்கான தகவல்களை திரட்ட வந்த கதையை சொல்லியுள்ளார். பிறகென்ன அப்படியே அந்த வெள்ளையனை அலாக்காக மடக்கி தனது வித்துவ திறமையை எல்லாம் சொல்லி துபாய்,இந்தியா,சிங்கப்பூர் என கடை பல திறந்து வெள்ளையன் இன்வெஸ்டர் இவர் அவனது உலகளாவிய கம்பனிக்கு கோ பார்ட்னர் என்ற ரீதியில் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.மிக விரைவில் துபாயில் வாசனைத்திரவிய மல்டி நெஷனல் கம்பனி திறக்கும் அடுத்த முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.ஆம் சில நேரம் அதிர்ஷ்டம் காலடியிலிருக்கும். இப்போதே உங்களுக்கருகிலுள்ள சேம்பர்களுக்கு ஒரு நடை போக பழகிக்
கொள்ளுங்கள்.

இந்தியா.சைனா இரண்டும் தான் அடுத்த பொருளாதார வல்லரசுகள் என எல்லோரும் சொல்லிக் கொண்டிருகிகின்றார்கள். ஆனால் பெல்ஜியம் என்ற ஒரு ஐரோப்பிய நாடு சத்தமில்லாமல் வளர்ந்து கொண்டிருக்கின்றது. அண்மையில் கொடிபிடிப்பு,ஆர்ப்பாட்டம் என நம்மவர்கள் ஊர்வலம் வந்த நாடிது.ரொம்ப கெட்டிக்காறர்கள்.  பொருளாதாரத்தை மொத்தமாக திறந்துவிட்டு மொத்த உலக உற்பத்தியாளர்களையும் அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.பெல்ஜியம் புரூஸல்சில் நம்மவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த போது அங்கு அன்றோப்பேட்டில் பெரியதொரு வர்த்தக மகாநாடு நடந்து கொண்டிருந்தது.ஐயாவும் அதில் ஆஜர்.அவர்களுக்கு நிறைய மூலப் பொருட்கள் தேவை. நாம் வெட்டி வீசும் மீன் செட்டையிலிருந்து நம்மால் எரிக்கப்படும் வைக்கோல் வரை இவர்களுக்கு விற்கலாம்.உலகிலேயே மாணிக்கக் கற்களை அதி கூடிய விலைக்கு வாங்கக் கூடிய கம்பனிகளும் இங்குதான் இருக்கின்றன. அமைதியான மக்கள்.ஆர்ப்பாட்மில்லாத வாழ்க்கை.ஒரு முறை பெல்ஜியம் எம்பஸி கொமர்ஸியல் டிவிஷனுக்கு விசிட் பண்ணித்தான் பாருங்களேன்.

பிறர் சொல்வதை பொறுமையாக கேழுங்கள்.
போராடாமல் வளர்ச்சியில்லை.
மனமுவந்து கொடுக்கப் பழகுங்கள்.
தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.
தளர்வின்றி செயல்படுங்கள்.
நன்றியுடன் நடந்து கொள்ளுங்கள்.
உங்களையும் பிறரையும் மதியுங்கள்.
ஒரு நோக்கம் இருக்கட்டும்.

 
( நேற்றிரவு என்ட மூத்தாப்பா அதாவது என்ர உம்மாட உம்மாட உம்மாட புருஷன் கனவுல வந்து டேய் பேராண்டி என்ன வெள்ளையனைப்பற்றியே எழுதிக் கொண்டிருக்கின்றாய் நம்மட மூலிகைகளைப் பற்றியும் எழுதேன் என தலையை பிறாண்டி எடுத்து விட்டார். எனவே அடுத்த பகுதி முழுக்க முழுக்க என் மூத்தாப்பா கைகட்டிப் பரிகாரியாருக்கு சமர்ப்பணம். வேப்பிலை,
மாவிலை,மாங்கொட்டை, மகாத்மியம்…….)

17-04-2009

No comments: